கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் நேற்றைய தினம் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பாகிஸ்தான் தேசிய தின வரவேற்பு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
இதில் இலங்கை அரசியல் தலைமைகள், இராஜதந்திர அதிகாரிகள், மூத்த பாதுகாப்பு அதிகாரிகள், அரசாங்கப் பிரதிநிதிகள், பிரபல வர்த்தகப் பிரமுகர்கள், மற்றும் பாகிஸ்தானிய ஆதரவாளர்கள் என பெருமளவிலான பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர்.
இதன் போது கருத்துதெரிவித்த பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜனரல் பஹீம் உல் அஸீஸ் (ஓய்வு நிலை) அவர்கள், பாகிஸ்தானும் இலங்கையும் பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் நெருங்கிய உறவுகளை தொடர்ந்து பேணி வருகின்றன.
வர்த்தகம், பாதுகாப்பு, விஞ்ஞானம், கலாசாரம் மற்றும் கல்வி போன்ற பல துறைகளில் பாகிஸ்தான் – இலங்கை உறவு அடங்கியுள்ளது என்று குறிப்பிட்ட அவர், இலங்கை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் பாகிஸ்தான் அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாகக் துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா கலந்துகொண்டார்.
தேசிய தின நிகழ்வையொட்டி கலாச்சார கண்காட்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கலாச்சார கண்காட்சியானது அனைவரினதும் கவனத்தை ஈர்த்தமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானின் நிலப்பரப்புகள், வணிகத் திறன், வரலாற்று தடம் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றைக் காட்டும் ஆவணப்படம் ஒன்றும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டது.