இலங்கைக்கு நேராக எதிர்வரும் 15ஆம் திகதிவரை சூரியன் உச்சம் கொடுக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதனால் அதிகளவிலான வெப்பத்தை உணரக்கூடியதாக இருக்கும் என்றும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக இம்மாதம் 05ஆம் திகதி தொடக்கம் 15ஆம் திகதிவரை இலங்கையின் அகலக் கோடுகளுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்குமெனவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேவேளை நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில பிரதேசங்களில் பிற்பகல் 02 மணிக்குப் பின்னர் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில பகுதிகளில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் அதற்கிணங்க மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.