இலங்கையின் பிரபல ஜோதிடர் சந்திரசிறி பண்டார (63) காலமானார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று (22) காலை காலமானார்.
கடந்த காலங்களில் அரசியல் கள நிலவரங்களை எதிர்வுகூறுவதில் ஜோதிடர் சந்திரசிறி பண்டார சர்ச்சைகளுக்குள்ளாக்கப்பட்டிருந்தார்.
2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ‘இருதின’ என்ற சிங்கள பத்திரிகையில் சந்திரசிறி பண்டார தொடர்ந்தும் எழுதி வந்துள்ளார். அதேவேளையில் தனியார் தொலைக்காட்சிலும் அவரது நிகழ்ச்சி ஒன்று தொடர்ந்து இடம்பெற்று வந்தது.
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவித்த சில கருத்துக்கள் மற்றும் எதிர்வுகூறல்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத்துறையாலும் கைது செய்யப்பட்டிருந்தார்.
மேலும் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெற்றியடைவதாகக் கணித்து அது நடக்கவில்லை என்றால் தன்னைத் தானே சுட்டுக் கொள்வதாக அறிவித்தார்.
மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெறாவிட்டால், பொதுவெளியில் சுட்டுக் கொள்வேன் எனவும் ஜாதகம் பார்ப்பதை நிறுத்துவதாகவும் பகிரங்கமாக அறிவித்தார்.
எனினும், ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றதால், அவரது கணிப்பு குறித்தும், தன்னைத் தானே தலையில் சுட்டுக்கொள்ளும் சவால் குறித்தும் பலரும் விசாரிக்கத் தொடங்கினர்.
அதன்பின்பு பார்வையாளர்கள் மத்தியில் அபிப்பிராயத்தை ஏற்படுத்தவே இவ்வாறான கருத்தை வெளியிட்டதாகவும் இந்த கணிப்புகள் 100% துல்லியமானவை அல்ல எனவும் தெரிவித்திருந்தார் இதுதொடர்பில் மக்கள் மத்தியில் விமர்சனத்துக்கும் கேலிக்குள்ளாக்கப்பட்டிருந்தார்.