சுமார் 10 இலட்சம் குழந்தைகள் கையடக்கத் தொலைபேசிகளுக்கு அடிமையாகியுள்ளதாக குழந்தைகள் மனநல விசேட வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக, கையடக்கத் தெலைபேசிகளுக்கு அடிமையாகியுள்ள குழந்தைகளை அதிலிருந்து மீட்க முன்வருமாறு பெற்றோர்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான உதயகுமார அமரசிங்க கையடக்கத் தொலைபேசிகளுக்கு எல்லையற்ற விதத்தில் அடிமையாகியுள்ள குழந்தைகளை அதிலிருந்து மீட்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
“தற்போது பெற்றோர்களால் கிடைக்கப்பட்டுள்ள 20 புகார்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
முதலில் கையடக்கத் தொலைபேசிகளில் விளையாட்டுக்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த அநேக குழந்தைகள் தற்போது யூடியூப், இன்ஸ்டாகிராம்,முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களுக்கும் அதிகளவில் அடிமையாகியுள்ளனர்.
கையடக்கத் தொலைபேசிகளில் அதிகளவில் நேரத்தைக் கடத்துவது சிகிச்சை பெறவேண்டிய ஒரு மனநோய்.
இவ்வாறு கையடக்கத் தொலைபேசிகளில் அதிகளவில் நேரத்தைக் கடத்துவதால் குழந்தைகள் கண் பார்வையில் பிரச்சினை, மனநிலை பாதிப்புகள் போன்ற பல நோய்களுக்கு ஆளாக நேரிடும்.
மேலும், தற்போது பெற்றோர் மற்றும் சகோதரர்களுடன் காணப்பட்ட தொடர்பு துண்டிக்கப்படும் அதேவேளை, வன்முறைமிக்க ஒரு பரம்பரையை உருவாக்கியுள்ளது.” என தெரிவித்தார்.