டயனாவை ஜனாதிபதிதான் பாதுகாத்து வந்தார்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும்வரை சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை முஜிபுர் ரஹ்மான்

Date:

டயனா கமகே இந்த நாட்டு பிரஜை அல்ல என்பதை ஜனாதிபதியும் அரசாங்கமும் அறிந்திருந்தும் ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக செயற்படுத்த அவரை தவறாக பயன்படுத்தி வந்துள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

அதேநேரம் எமது நாட்டு பிரஜை அல்லாத டயனாவுக்கு குடிவரவு குடியகல்வு முன்னாள் கட்டுப்பாட்டு அதிகாரி  கடவுச்சீட்டு விநியோகிக்க மறுத்துள்ளபோதும் தற்போதுள்ள கட்டுப்பாட்டு அதிகாரி எவ்வாறு கடவுச்சீட்டு விநியோகித்தது என்பது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று(13) இடம்பெற்ற ஏற்றுமதி இறக்குமதி தொடர்பான கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக வேண்டி கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு சென்றேன். ஆனால் அரசாங்கம் பணம் இல்லை என தெரிவித்து தேர்தலை நடத்தாமல் விட்டு விட்டது.

நான் நேர்மையாகவே எனது பதவியை இராஜினாமா செய்தேன். அதனாலே நான் மீண்டும் இந்த சபைக்கு வர முடிந்தது. ஆனால் டயனா கமகே நேர்மையற்ற முறையில் செயற்பட்டு வந்ததால், அவருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி இல்லாமல் போயுள்ளது.

டயனா கமகே இந்த நாட்டு பிரஜை அல்ல என்பதை அவர் ஆரம்பத்தில் எங்களுக்கும் மறைத்திருந்தார். அது தொடர்பான உண்மை எமக்கு தெரியவந்ததுடன் அது தொடர்பில் நாங்கள் நீதிமன்றில் முறையிட்டோம்.

ஆனால் ஜனாதிபதியும் அரசாங்கமும் டயனாவை பாதுகாத்து வந்தது. ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராகவும் சஜித் பிரேமதாசவுக்கு எதிராகவும் செயற்பட அரசாங்கம் அவரை வழிநடத்தி வந்தது. அதனாலே பாராளுமன்றத்தில் ஒவ்வொரு முறையும் எமது கட்சி தலைவருக்கு எதிராக அவர் உரையாற்றி வந்தார்.

அதேநேரம் டயனா கமகே இராஜதந்திர கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள விண்ணப்பித்திருந்தபோது, அவர் இந்த நாட்டு பிரஜை அல்ல என தெரிவித்து, அவருக்கு கடவுச்சீட்டு விநியோகிக்க முடியாது என குடிவரவு குடியகல்வு முன்னாள் கட்டுப்பாட்டு அதிகாரி பாராளுமன்ற முனனாள் செயலாளருக்கு அறிவித்திருந்தார்.

அத்துடன் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் நான் இந்த சபையில் உரையாற்றும்போது, இந்த சபையில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் இருக்கிறார். அது தொடர்பில்  தேடிப்பார்க்குமாறு சபாநாயகரை கேட்டுக்கொண்டிருந்தேன். ஆனால் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும்வரை சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும் டயனா கமகேவுக்கு இராஜதந்திர கடவுச்சீட்டு விநியோகிக்க முடியாது என குடிவரவு குடியகல்வு முன்னாள் கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்திருந்தபோதும் தற்போதுள்ள கட்டுப்பாட்டு அதிகாரி கடந்த 2022, 09, 12ஆம் திகதி அன்று அவருக்கு இராஜதந்திர கட்வுச்சீட்டு விநியோகித்துள்ளது.

அப்போது நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவாகும். எமது நாட்டு பிரஜை அல்லாத ஒருவருக்கு தற்போதுள்ள குடிவரவு குடியகல்வு  கட்டுப்பாட்டு அதிகாரி எந்த அடிப்படையில் கடவுச்சீட்டு விநியோகித்தார். அவருக்கு அதற்காக யார் அழுத்தம் கொடுத்தார் என்பது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Popular

More like this
Related

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...