பலஸ்தீனத்தை ஒரு நாடாக நோர்வே அங்கீகரிக்கும் என அந்நாட்டு பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோர் (Jonas Gahr) தெரிவித்துள்ளார்.
அந்த பகுதியை இரு நாடுகளாக பிரிப்பது தான் இஸ்ரேலுக்கு நல்லது என்று தெரிவித்த அவர், பலஸ்தீனத்திற்கு நோர்வே அங்கீகாரம் அளிக்கும் என்று அறிவித்தார்.
பலஸ்தீனத்திற்கு அங்கீகாரம் இல்லையென்றால் மத்திய கிழக்கில் அமைதி நிலவாது என்றும் இந்தப்போரில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு காயமடைந்த நிலையில், இஸ்ரேலியர்களுக்கும் பலஸ்தீனியர்களுக்கும் ஒரே மாதிரியான அரசியல் தீர்வை வழங்கி , ஒரே மாற்றாக வாழ வேண்டும் என்றும் பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் ஸ்பெயினின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் பலஸ்தீனிய அரசை முறையாக அங்கீகரிப்பதற்கான திகதியை இன்று அறிவிக்க உள்ளார்.
இதனைத்தொடர்ந்து, அயர்லாந்தும் பலஸ்தீனத்தை அங்கீகரிப்பது குறித்த தனது திட்டங்களை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அயர்லாந்து மற்றும் நோர்வேயில் உள்ள இஸ்ரேலின் தூதர்களை உடனடியாக இஸ்ரேலுக்கு திரும்புமாறு இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் காட்ஸ் உத்தரவிட்டுள்ளார்.
இதன்போது ‘அயர்லாந்தும் நோர்வேயும் இன்று பயங்கரவாத்தை ஏற்றுக்கொண்டு முழு உலகிற்கும் ஒரு செய்தியை சொல்லி இருக்கின்றன” என்று காட்ஸ் கூறியுள்ளார்.
ஐரோப்பிய நாடுகள் பலஸ்தீனத்திற்கு அங்கீகாரம் வழங்குவது தீவிரவாதத்தையும் உறுதியற்ற தன்மையையும் தூண்டும் என்றும் அவர்களை ஹமாஸின் கை பாவைகள் ஆக்கும் என்றும் இஸ்ரேல் கூறியுள்ளது.
இதுவரை 193 ஐ.நா உறுப்பு நாடுகளில் 143 பலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன.