பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ள காசா மக்களுக்கு உதவுவதற்காக புதிதாக உருவாக்கப்பட்ட அமெரிக்காவின் மிதக்கும் கப்பல் முதன்முறையாக இன்று வெள்ளிக்கிழமை (17) காசாவிற்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எல்லைக் கடவுகள் மற்றும் இஸ்ரேலின் கட்டுப்பாடுகள் உணவு உள்ளிட்ட உதவிப்பொருட்களை வழங்குவதற்கு தடையாக காணப்பட்டன. இந்நிலையில் மிதக்கும் கப்பலினூடாக உதவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு வாரத்திற்கும் மேலாக தெற்கு காசாவிலுள்ள இரு முக்கிய எல்லைகளுக்குள் உணவு உள்ளிட்ட உதவிப்பொருட்கள் எதுவும் சென்றடையவில்லையென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தெற்கு காசாவில் உணவு தீர்ந்து வருவதாகவும், எரிபொருள் குறைந்து வருவதாகவும் உதவி நிறுவனங்கள் கூறுகின்றன, இதேவேளை காசாவின் வடக்கில் ஏற்கனவே பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க முகவர் மற்றும் உலக உணவுத் திட்டம் கூறுகின்றன.
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, சுமார் 1.1 மில்லியன் பலஸ்தீனியர்கள் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் மிதக்கும் கப்பல் மூலம் நாளொன்றிற்கு150 கொள்கலன்களில் உணவு உள்ளிட்ட உதவிப்பொருட்களை வழங்குவதற்கு அமெரிக்க இராணுவ அதிகாரிகள் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கடல் மார்க்க நடவடிக்கை காசாவின் பலஸ்தீனிய மக்களுக்கு மனிதாபிமானமான உதவிகளை வழங்குவதற்கான தொடர்ச்சியான பன்னாட்டு முயற்சியென கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும் முன்னதாக தரைவழியாக நாளொன்றுக்கு 500 இற்கும் மேற்பட்ட கொள்கலன்கள் காசாவிற்குள் அனுப்பட்ட நிலையில் மிதக்கும் கப்பல் திட்டம் தரைவழி உதவிக்கு பதிலீடாக அமையாது என தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க ராணுவ வீரர்களை நேரடியாக ஈடுபடுத்தாமல், இஸ்ரேல் ராணுவ பொறியாளர்களுக்கு பயிற்சி அளித்து அவர்கள் மூலம் கட்டி முடித்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இரண்டாயிரத்து 600 கோடி ரூபாய் செலவில் இந்த மிதக்கும் பாலத்தை கட்டியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.