நெதன்யாகு எனும் கொடுங்கோலனை தண்டிக்க உலக குற்றவியல் நீதிமன்றம் முதுகென்பற்றவர்களாக இருக்கலாம்.
ஆனால் நாளை இமாம் மஹ்தி (அலை) வருகின்ற போது இமாம் மஹ்தியின் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னால் இந்த நெதன்யாகு எனும் கொடுங்கோலனின் தலையோ, அவரது பிள்ளையின் தலையோ, அல்லது அவரது பேரனின் தலையோ கொய்யப்படும் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான, ஸ்ரீ.ல.மு.கா. பிரதித்தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் (08) பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
இஸ்ரேலிய இராணுவத்தின் சார்பு நிறுவனங்களான கே.எப்.சி., மேக் டொனல்ட்ஸ், பீட்சா ஹட் போன்ற உணவகங்களை மனிதாபிமானமிக்கவர்களும், இலங்கை முஸ்லிம்களும் பகிஷ்கரிக்க வேண்டும்.
நெதன்யாகு எனும் கொடுங்கோலனை பாதுகாப்பு சபையும் கட்டுப்படுத்த தவறி, உலக குற்றவியல் நீதிமன்றம் பிடியானை பிறப்பிப்பதை அறிந்து அமெரிக்கா தடுத்து நிறுத்தியுள்ளது.
உலக குற்றவியல் நீதிமன்றம் பிடியானை பிறப்பிக்க முதுகென்பற்றவர்களாக இருக்கலாம். ஆனால் நாளை இமாம் மஹ்தி (அலை) வருகின்ற போது இமாம் மஹ்தியின் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னால் இந்த நெதன்யாகு எனும் கொடுங்கோலனின் தலையோ, அவரது பிள்ளையின் தலையோ, அல்லது அவரது பேரனின் தலையோ கொய்யப்படும் என்ற உறுதியான நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
கலிமா சொன்ன முஸ்லிம்கள் என்பதற்காக பாலஸ்தீனில் முஸ்லிம்களை அழித்துக் கொண்டிருக்கும் இஸ்ரேலிய இராணுவத்தின் சார்பு நிறுவனங்களான கே.எப்.சி., மேக் டொனல்ட்ஸ், பீட்சா ஹட் போன்ற உணவகங்களில் நீங்கள் உண்ணும் உணவுகள் இஸ்ரேலிய ஆயுததாரிகளுக்கு பக்கபலமாக இருப்பதுடன் முஸ்லிம்களை கொல்ல பணமனுப்பும் உண்டியல்களாக இந்த நிறுவனங்கள் இருந்து கொண்டிருக்கிறது.
நெதன்யாகு எனும் அகோரனின் தலைமையில் இஸ்ரேல் நாசக்காரர்கள் பலஸ்தீனில் வாழும் மக்களை கொன்று குவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
மனிதாபிமானத்தை நேசிக்கும் உலக வாழ் மக்கள் இதனை எண்ணி அச்சப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
ரபா பிரதேசத்தில் தஞ்சம் புகுந்துள்ள காஸா அகதிகளின் உயிருக்கு உத்தரவாதமளிக்க முடியாத வகையில் ஐ.நாவும், அவர்களின் பாதுகாப்பு சபையும் இருந்து கொண்டிருக்கிறது.
அடுத்த நிமிடம் என்ன செய்யப்போகிறார்கள் என்று தெரியாத நிலையில் நெதன்யாகு எனும் அகோரனையும், அவரது கொடூர இராணுவத்தையும் கட்டுப்படுத்த முடியாத நிலையில் எகிப்திய ஜனாதிபதி நாடகமாடிக் கொண்டிருக்கிறார்.
ரபா பிரதேசத்தில் தஞ்சம் புகுந்துள்ள காஸா மக்களை இஸ்ரேலிய இராணுவம் கொல்ல இலகுவாக அந்த பிரதேசத்தின் எல்லை திறந்து விடப்பட்டுள்ளது.
பலஸ்தீனில் நடக்கும் கொடுமைகளை சமாதானத்தை போதிக்கும் நாடுகள், மனித உரிமையை வலியுறுத்தும் நாடுகள் எல்லாம் மௌனமாக இருந்து நெதன்யாகு எனும் கொடுங்கோலனுக்கு லைசன்ஸ் கொடுத்து றபா அகதிகளை கொல்ல தயாராகின்ற போது உலக நாகரீகங்கள், சர்வதேச சட்டங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறது என்று கேட்க விரும்புகிறேன்.
முஸ்லிம்கள் இவ்வாறான விடயங்களை உணர்ந்து இஸ்ரேலுக்கு ஆதரவானவர்களை பகிஷ்கரிக்கும் நோக்கில் அவர்கள் சார்பு உணவகங்களை பகிஸ்கரியுங்கள் எனவும் அவர் கருத்து தெரிவித்தார்.