போதிய மருத்துவர்கள் இன்மை பிரச்சினை தொடர்ந்தால் மருத்துவமனைகளை மூட வேண்டிய நிலையேற்படலாம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
உரிய தரப்பினர் நாட்டின் மருத்துவ அமைப்பிற்கு தேவையான அளவிற்கு மருத்துவர்களை நியமிப்பதற்கு அனுமதி வழங்காவிட்டால் வைத்தியர்கள் இன்றி பாதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளை மூடுவது குறித்து தீர்மானிக்கவேண்டிய நிலையேற்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
இலங்கை அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு கூட்டத்தில் இது குறித்து தீர்மானிக்கப்படவுள்ளதாக ஊடக பேச்சாளர் வைத்தியர் சமால் விஜயசிங்க தெரிவித்துள்ளார்.
மருத்துவமனைகளிற்கு நியமிக்கப்படும் மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்காததால் நாட்டின் மருத்துவதுறையில் பெரும் நெருக்கடி உருவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் சனத்தொகை அதிகரிப்பிற்கு ஏற்ப நியமிக்கப்படும் மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும் என தெரிவித்துள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் மேலும் அதிக மருத்துவர்களை உருவாக்கவேண்டும் பயிற்றுவிக்கவேண்டும்.
வசதிகளை அதிகரிக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்து வருகின்ற போதிலும் புதிய மருத்துவர்களை உருவாக்கினாலும் அவர்களிற்கு நாட்டில் வேலை வழங்க முடியாத நிலையேற்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
1390 மருத்துவர்கள் தங்கள் நியமனங்களை பெற்றுக்கொள்வதற்காக 8 மாதங்கள் காத்திருக்கவேண்டியுள்ளது நோயாளருக்கு உரிய சேவையை வழங்க முடியாமல் தடுமாறும் மருத்துவமனைகளிற்கு உதவக்கூடிய மருத்துவர்களின் பரிதாபமான துரதிஸ்டவசமான நிலையிது நியமனங்களை வழங்குவதில் ஏற்படும் தாமதங்களை அறிந்தும் தொடர்புபட்ட தரப்பினர் உரிய நடவடிக்கைகளை எடுக்கின்றார்கள் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.