டயனா கமகே பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியாது எனும் உயர் நீதிமன்றத் தீர்ப்பின் விளைவாக வெற்றிடமான ஐக்கிய மக்கள் சக்தி தேசியப் பட்டியல் எம்.பி. பதவிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை பரிந்துரை செய்ய முடிவு செய்துள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
எதிர்க் கட்சித் தலைவரும், ஐ.ம.ச. கட்சியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சரான டயனா கமகே ஐ.ம.ச. கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு பிரவேசித்திருந்த நிலையில், அவர் பிரித்தானிய பிரஜா உரிமை கொண்டவர் என்பதால், அரசியலமைப்பின் பிரகாரம் அவருக்கு எம்.பி. பதவி வகிக்க தகுதியற்றவர் என அறிவிக்குமாறு தொடர்ப்பட்ட வழக்கின் பிரகாரம் அவரது எம்.பி. பதவி வறிதாவதாக உயர் நீதிமன்றம் இன்று (08) அறிவித்ததைத் தொடர்ந்து அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார்.
அந்த வகையில் குறித்த பாராளுமன்ற வெற்றிடத்தை நிரப்புவதற்கு ஐ.ம.ச. கட்சிக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்கான ஐ.ம.ச. மேயர் வேட்பாளராக முஜிபுர் ரஹ்மாளை களமிறக்கும் வகையில் கட்சி எடுத்த தீர்மானத்தின் காரணமாக முஜிபுர் ரஹ்மான் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார்.