அகமதாபாத் – சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்தப்பட்டு நான்கு இலங்கையர்களை குஜராத் காவல்துறையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் இன்று கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் இலங்கையை சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் எனப்படும் இஸ்லாமிய அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களிடம் இரகசிய இடத்தில் வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர்கள் குறித்த விமான நிலையத்திற்கு எதற்காக வந்தனர் என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டில் பெரும் தாக்குதல் நடத்துவதற்காக இலங்கையில் இருந்து பயங்கரவாதிகள் அனுப்பப்பட்டதாக குஜராத் காவல்துறை தகவல்கள் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் இலங்கையில் இருந்து சென்னை வழியாக அகமதாபாத் சென்றதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும், அவர்கள் திட்டமிட்ட இலக்கை அடையும் முன்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், கைது செய்யப்பட்டவர்கள் பாகிஸ்தானில் உள்ள தங்களின் குழு உறுப்பினர்களுக்கு உத்தரவுக்காக காத்திருந்ததாகவும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இது குறித்து குஜராத் தீவிரவாத தடுப்பு படை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புடைய இலங்கையைச் சேர்ந்த 4 பேர் ரயில் அல்லது விமானம் மூலம் மே 18 அல்லது 19 ஆம் தேதி அகமதாபாத்துக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இலங்கையில் இருந்து 4 பேர் விமானம் மூலம் அகமதாபாத் வருவது உறுதி செய்யப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
நேற்று காலை கொழும்பில் இருந்து புறப்பட்ட இண்டிகோ விமானம் மூலம் சென்னை வழியாக அகமதாபாத் வந்த 4 பேர் இரவு 8.10 மணியளவில் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்களின் பெயர் முகமது நுஸ்ரத், முகமது நஃப்ரான், முகமது ஃபாரிஸ் மற்றும் முகமது ரஷ்தீன் என்பது தெரியவந்துள்ளது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.