ஈரானில் அடுத்த மாதம் 28 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் பதிவு செய்து கொள்வதற்கு ஐந்து நாட்கள் காலவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகொப்டர் கிழக்கு அஸர்பைஜானுக்கு அருகிலுள்ள ஜோல்பா பகுதியில் கடந்த 19 ஆம் திகதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் உள்ளிட்ட 09 பேர் உயிரிழந்தனர்.
அரசியலமைப்பின் 131 ஆவது பிரிவின்படி புதிய ஜனாதிபதி நியமிக்கப்படும் வரை இடைக்கால ஜனாதிபதியே நியமிக்கப்பட வேண்டும் என்ற பின்னணியில் முதல் துணை ஜனாதிபதியாக பணிபுரியும் முகமது மொக்பர் இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.
எவ்வாறாயினும் 50 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட வேண்டும். இந்நிலையில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் பதிவு செய்து கொள்வதற்கு ஐந்து நாள் காலவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, 40 முதல் 75 வயதுக்கு இடைப்பட்டவர்கள் குறைந்தபட்சம் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் வேட்பாளர்களாகப் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.