இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் இறுதி நாளான 15 ஆம் திகதி மாணவர்கள் குழுவொன்றுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
மினுவாங்கொடை அல் அமான் முஸ்லிம் கல்லூரியில் பரீட்சை நிலையத்தில் இருந்த மாணவர்களுக்கு புவியியல் முதல் வினாத்தாள் மற்றும் அதற்கு தேவையான வரைபடங்கள் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த பரீட்சை நிலையத்தில் 14 தமிழ் மாணவர்கள் இருந்த போதிலும் அதற்கு தமிழ் மேற்பார்வையாளர் நியமிக்கப்படவில்லை என ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
பரீட்சை நிலையத்தில் தமிழ் மேற்பார்வையாளர் இல்லாத காரணத்தினால் மாணவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண எவரும் இல்லை எனவும் இதனால் அவர்கள் பாரிய அநீதிக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்வு மையங்களுக்கு பணியாளர்களை நியமிப்பது வலயக் கல்விப் பணிப்பாளரின் பொறுப்பாகும். ஆனால் அது முறைசாரா முறையில் கையாளப்பட்டதன் காரணமாகவே இந்த சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மினுவாங்கொடை அல்அமீன் முஸ்லிம் கல்லூரியில் நிறுவப்பட்டுள்ள குறித்த பரீட்சை நிலையத்தில் பணிபுரிந்த அதிகாரிகளிடம் பரீட்சை திணைக்களம் விசாரணை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வினாத்தாளில் தோற்றிய பரீட்சார்த்திகள் எவருக்கும் அநீதி இழைக்கப்படவில்லை என பரீட்சை திணைக்களத்தின் பேச்சாளர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், இது தொடர்பான சம்பவங்களுக்கு முகம் கொடுத்த மாணவர்கள் குறித்து தனித்தனியாக ஆய்வுகள் நடத்தப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.