வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ‘ரெமல்’ புயல் காரணமாக கடற்படை, மீனவர் சமூகத்தினருக்கு பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடக்கு வங்காள விரிகுடாவில் “ரெமல்” என்று பெயரிடப்பட்ட சூறாவளி புயல், மே 26ஆம் திகதியன்று அதிகாலை 05.30 மணியளவில் கடுமையான சூறாவளி புயலாக தீவிரமடைந்துள்ளதாக திணைக்களத்தின் சிவப்பு எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புயல் இலங்கையின் காங்கேசன்துறையிலிருந்து 1500 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளதாகவும், இது வடக்கு நோக்கி நகர்ந்து மேலும் தீவிரமடைந்து பங்களாதேஷ் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கத்தை (இந்தியா) இன்றிரவு கடக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலும் வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் பலத்த மழையுடன் 60-70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, வரைபடத்தில் சிவப்பு நிறத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கடல் பகுதிகளுக்கு மறுஅறிவித்தல் வரும் வரை கடற்படை மற்றும் மீனவ சமூகத்தினர் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேற்குறிப்பிட்ட கடல் பகுதிகளில் இருப்பவர்கள் உடனடியாக கரையோரங்களுக்குத் திரும்பவும் அல்லது பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.