பாடசாலை மாணவிகளுக்கு செனிட்டரி நப்கின்களை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று (06) நாவல ஜனாதிபதி பெண்கள் கல்லூரியில் இடம்பெற்றது.
இலங்கையின் மொத்த மாணவர் சனத்தொகையில் வயது வந்த மாணவிகளின் மொத்த எண்ணிக்கையில் தோட்டப் பாடசாலை தொகுதிக்கு சொந்தமான 07 தேசிய பாடசாலைகள் மற்றும் அனைத்து மாகாண பாடசாலைகளுக்கும் 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடக்கம் 06 மாதங்களுக்கு செனிட்டரி நப்கின்களை கொள்வனவு செய்வதற்கான இலவச வவுச்சர்களை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, ஒரு மாணவிக்கு ரூ. 1,200 பெறுமதியான வவுச்சர் வழங்கப்படவுள்ளதுடன், பாடசாலைகள் ஊடாக மாணவிகளுக்கு வவுச்சரை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு ஏற்கனவே ஏற்பாடு செய்துள்ளது.
இந்த வவுச்சரைப் பயன்படுத்தி, செனிட்டரி நப்கின்களை கல்வி அமைச்சால் பதிவு செய்யப்பட்ட வர்த்தக நிலையத்தில் இருந்து கொள்வனவு செய்யலாம்.
இவ்வாறு மாணவிகளுக்கு வழங்கப்படும் அந்தந்த வவுச்சர் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது.
இது 600 ரூபாய் மதிப்புள்ள ‘A’ மற்றும் ‘B’ ஆகிய இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளதுடன் ‘A’ பகுதியை முதலில் பயன்படுத்த வேண்டும் என்பதுடன் அதன் செல்லுபடியாகும் காலம் 10.06.2024 – 10.07.2024 வரை ஆகும்.
மற்ற பகுதியான ‘B’ 01.09.2024 – 30.09.2024 இடைப்பட்ட காலத்தில் பயன்படுத்தப்படலாம்.
ஆகவே, அந்த காலப்பகுதிக்குள் செனிட்டரி நப்கின்களை கொள்வனவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்படுள்ளது.
பாடசாலைகளில் மாணவர்களின் ஆளுமை வளர்ச்சி மற்றும் ஆரோக்கியமான நல்வாழ்வுக்கு உதவும் வசதிகளை வழங்கும் நோக்கத்துடன் கல்வி அமைச்சு இந்த சுகாதாரத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.
இது மாணவிகளின் பாடசாலை வருகையை ஊக்குவிக்கவும் மாதவிடாயின் போது அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சுகாதார அறியாமை காரணமாக கல்வியில் சரியான கவனம் இல்லாதது போன்ற பாதகமான சூழ்நிலைகளைத் தவிர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.