இந்திய லோக் சபா தேர்தல் (நாடாளுமன்றம்) இடம்பெற்று முடிந்துள்ள நிலையில், இன்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. காலை முதல் வாக்கெண்ணும் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத்தின் கீழ் சபைக்கு தலா ஒரு பிரதிநிதியை அனுப்புவதற்காக 543 மக்களவைத் தொகுதிகளில் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
எந்த கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை. 1951-52ல் நடந்த இந்தியாவின் முதல் தேர்தலுக்குப் பிறகு இந்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தல் இரண்டாவது மிக நீளமானது.
வாக்குகள் எண்ணப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் வெற்றி தோல்வி நிலைமைகள் மெதுவாக வெளிப்படும் என்பதுடன் பிற்பகலில் முடிவுகள் முழுமையாக வெளிவரும் என இந்திய ஊடகங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
தபால் மூல வாக்கு எண்ணிக்கை முடிந்த 30 நிமிடங்களுக்குப் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி மட்டும் தனித்து 100 இடங்களை தாண்டி முன்னிலை வகித்து வருகிறது. இதுவரை இந்தியா கூட்டணியானது 228 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கட்சி தற்போது நூற்றுக்கும் அதிகமான இடங்களில் முன்னிலையில் உள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்னர் காங்கிரஸ் கட்சி இவ்வாறு வெற்றி பெறும் சூழல் காணப்படுகிறது.
அதன்படி, தற்போது வரையில் காங்கிரஸ் கூட்டணி 222 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
கடந்த இரு தேர்தல்களைப் போல அல்லாமல் இம்முறை பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளின் இடையே மிகக் கடுமையான போட்டி நிலவி வருகிறது.