தமிழக அரசியல்வாதியும் மனித நேய ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மு.தமிமுன் அன்சாரி அவர்கள் விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி
தியாகங்களே வரலாறு என்பதை பறை சாற்றும் திருநாளாக ஹஜ் பெருநாள் திகழ்கிறது. ஆப்ரகாம் எனப்படும் நபி இப்ராகிம் (அலை) அவர்களை யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என மூன்று சர்வதேச சமுதாயங்களும் கொண்டாடுகிறார்கள்.
அவர் தன் அருமை புதல்வர் நபி இஸ்மாயில் (அலை) அவர்களை இறை திருப்தியை பெரும் நோக்கில் அறுத்து பலியிட துணிந்தார்.
தனக்காக தனது தவப்புதல்வரை பலி கொடுக்கத் துணிந்த அவரது தியாகத்தை மதித்து அந்த நரபலியை இறைவன் தடுத்து அதற்கு பகரமாக ஒரு ஆட்டை பலியிட அறிவுறுத்திய நிகழ்வே ஈதுல் அல்ஹா என்ற பெயரில் ஹஜ் பெருநாளாக கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு வருடந்தோறும் லட்சக்கணக்கான புனிதப் பயணிகள் ஹாஜிகளாக உலகமெங்கிருந்தும் மக்காவில் குவிந்து அரஃபா மைதானத்தில் உருகி – உருகி இறைவனை வணங்கி மகிழ்கிறார்கள்.
வெண்ணிற ஆடை தரித்து நாடு – நிறம் – இனம் – மொழி மறந்து வர்க்கப் பேதங்களை துறந்து சமத்துவமாக ஒன்று கூடும் காட்சிகள் வெறும் கண்காட்சிகள் அல்ல…! கண் கொள்ளா காட்சிகள்!
உலக அமைதிக்காகவும், தங்களின் தனிப்பட்ட நோக்கங்களுக்காகவும் பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன.
இவ்வாண்டு பலஸ்தீன மக்களின் அமைதியான நல்வாழ்வும், சுதந்திரமும் அனைவரின் பிரார்த்தனைகளிலும் இடம்பெறுகின்றன என்பதை அறிய முடிகிறது.
தியாகத்தை முன்னிறுத்தும் இந்நாளில் போர் வெறி, சர்வாதிகாரம், பெரும்பான்மைவாதம் போன்ற மானுட விரோத போக்குகள் மடியவும், மனித நேயமும் சகோதரத்துவமும் ஒங்கவும் உறுதியேற்போம்.
எல்லோரும் ஒரு குடும்ப மலர்களாய் மணம் வீசி வாழ்ந்திட அனைவரும் கரம் கோர்ப்போம் எனக் கூறி, மனித நேய ஜனநாயக கட்சியின் சார்பில் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் எனவும் குறித்த வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.