திருகோணமலையை சேர்ந்த முஹம்மட் பஹ்மி அவர்களின் புதல்வன் ஹஷன் ஸலாமா இன்று (15) இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னாருக்கிடையிலான 42Km தூரத்தினையுடைய பாக்கு நீரினையை நீந்தி சாதனை படைத்துள்ளார்.
பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த இலங்கையின் எட்டாவது நபராகவும், பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த உலகின் முதலாவது முஸ்லிம் நபராகவும் ஹஷன் ஸலாமா திகழ்கிறார்.
தரம் 10 இல் கல்வி கற்கும் 15 வயதான இவர் கடந்த மூன்று மாதங்களாக இச் சாதனை முயற்சிக்கான தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.
கடந்த மாதம் 18ஆம் திகதி இவர் பாக்கு நீரிணையின் இலங்கை கடல் எல்லையிலிருந்து தலைமன்னார் வரையான தூரத்தை பயிற்சி அடிப்படையில் நீந்திக் கடந்துள்ளார். இவருக்கான நீச்சல் பயிற்சிகளை விமானப்படை கோப்ரல் றொசான் அபேசுந்தர வழங்கி வருகின்றார்.
றொசான் அபேசுந்தர 2021 ம் ஆண்டு தலைமன்னாரிலிருந்து தனுஸ்கோடிக்கு நீந்திச் சென்று மீளவும் அங்கிருந்து தலைமன்னாருக்கு 28 மணிநேரம், 19 நிமிடம்,58 செக்கனில் நீச்சலை நிறைவு செய்து, ஆழிக்குமரன் ஆனந்தன் ஏற்படுத்தியிருந்த 51 மணிநேர சாதனையை முறியடித்த சாதனையாளர் ஆவார்.
மேலும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பாக்கு நீரிணையை நீந்திக்கடந்த திருகோணமலையைச் சேரந்த ஹரிகரன் தன்வந்தையையும் இவரே பயிற்றுவித்திருந்தார்.
இலங்கையரான இள வயதையுடைய பஹ்மி ஹஸன் சலாமா நாட்டின் விளையாட்டு வரலாற்றிலே தனது பெயரை பதிந்து கொள்வதற்காக தனது இலக்கினை அடைந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதுமட்டுமல்லாமல், திருகோண மலையில் உள்ள கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தினால் நடாத்தப்பட்ட அகில இலங்கை கடல் நீச்சல் போட்டியில் வெற்றியாளராக தெரிவாகியிருக்கின்றார்.
பஹ்மி ஹஸன் சலாமா விளையாட்டுத் துறைக்கு அப்பால் சென்று தனது அர்ப்பணிப்புகளூடாக நீருக்குக் கீழான சுத்திகரிப்புப் பணிகள் மற்றும் கடற் பாதுகாப்புச் செயன்முறைகள் தொடர்பாகவும் தனது நேரடி பங்களிப்பினை வழங்கியுள்ளார்.