பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு கோரி முன்வைக்கப்பட்ட மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான மேன்முறையீட்டு ஆணைக்குழுவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் (TGTE), முன்வைக்கப்பட்ட இந்த மேன்முறையீட்டினை அந்த ஆணைக்குழு கடந்த வெள்ளிக்கிழமை (21) ஏகமனதாக நிராகரித்துள்ளது.
இந்த மேன்முறையீடு தொடர்பில் மனுதாரர்கள் தரப்பினர்களிடம் விரிவான சாட்சி விசாரணைகளை, கடந்த மார்ச் மாதம் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் குறித்த ஆணைக்குழு முன்னெடுத்திருந்தது
இந்தநிலையில் அந்த மேன்முறையீடு தொடர்பான தீர்ப்பு கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டதுடன், இந்த முடிவு பிரித்தானிய நீதிமன்றத்திற்கும் அறியப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை விடுதலைப் புலிகள் மீதான தடையை பிரித்தானியா தொடர்ந்தும் கடைப்பிடிக்கும் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) தனது எக்ஸ் (X) தளத்தில் தெரிவித்துள்ளார்.
அவருடைய பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ”இங்கிலாந்து தடை செய்யப்பட்ட அமைப்பு மேல்முறையீட்டு ஆணையம் மற்றும் நாடாளுமன்றத்தால் அமைக்கப்பட்ட ஒரு சுயாதீன நீதிமன்றம் தலைமையில் தடை நீக்கத்திற்கு எதிராக தீர்ப்பளித்தது.
இந்த ஆணயைத்தில் ஓய்வு பெற்ற மூத்த உயர் நீதிமன்ற நீதிபதிகளே இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழம் என்ற தனிநாட்டு கோரிக்கைக்கு ஆதரவு வழங்குகின்ற நாடு கடந்த தமிழீழ அரசாங்கமே தடையை நீக்குமாறு கோரியதாக அலிசப்ரி சுட்டிக்காட்டுகின்றார்.
எனினும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஐக்கிய இராச்சியத்தில் தடை செய்யப்படவில்லை என்று அவரது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், அகிம்மை வழிமுறைகள் மூலம் தனிநாடு என்ற நோக்கத்தை அடைவதற்கு முயற்சிப்பதாக அலிசப்ரி குற்றம் சுமத்தியுள்ளார்.
சர்வதேச நாடுகள், தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கச் செய்வதன் மூலம் தாங்கள் மீண்டும் புத்துணர்வைப் பெறும் நிலையை உருவாக்குவதே, விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பு கொண்டுள்ள மூலோபாய அணுகுமுறை என்றும் அலி சப்ரி மேலும் தெரிவித்துள்ளார்.