இன ஐக்கியத்திற்காக தனது இறுதி மூச்சி வரை பாடுபட்ட கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன

Date:

சிரேஸ்ட அரசியல்வாதியும் நவ சம சமாஜ கட்சியின் தலைவருமான கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன காலமானார்.

இவர் நீண்ட காலமாக சுகயீனமுற்றிருந்த நிலையில் இன்று (25) தனது 81 ஆவது வயதில் காலமாகினார்.

1943ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் திகதி லுணுகலையில் பிறந்த கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன, மத்துகமவில் தனது ஆரம்பக் கல்வியையும், பின்னர் கொழும்பு ஆனந்தா கல்லூரியிலும் பயின்றார்.

அதன்பின்னர் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்ததுடன், இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 1970ஆம் ஆண்டு கலாநிதி பட்டம் பெற்றார்.

விக்ரமபாகு கருணாரட்ன தமிழ் மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார் என்பதுடன் கடந்த காலங்களில் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக கொழும்பில் போராட்டங்களை முன்னெடுத்திருந்தார்.

மேலும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனவர்கள் தொடர்பான நம்பிக்கை, இராணுவ கையிருப்பில் உள்ள நிலங்களை மக்களுக்கு மீள கையளித்தல் போன்ற விடயங்களை தனது அதிகாரத்தை கொண்டு தீர்க்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் இவர் தெரிவித்திருந்தார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு எதிராக குரல் கொடுத்த காரணத்தினால் அவர் தனது தொழிலை இழக்க நேரிட்டது.

1977ஆம் ஆண்டில் விக்ரமபாகு கருணாரட்ன நவ சமசமாஜ கட்சியில் இணைந்து கொண்டிருந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட பல்வேறு இடதுசாரி கட்சித் தலைவர்களுடன் கடந்த காலங்களில் நெருக்கமான தொடர்புகளை பேணியிருந்தார்.

எங்கு அநீதி இழைக்கப்பட்டாலும், ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டாலும் அங்கு நீதியின் குரலாக நின்று களமாடிய ஒரு சிறந்த இடதுசாரி அரசியல் தலைவர் தான் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன.

பதவிகளுக்காகவும், சலுகைகளுக்காகவும் கொள்கை துறந்து – கோட்பாடு மறந்து குரங்குகள்போல் அங்கும் இங்கும் தாவும் கோமாளி அரசியலை நிராகரிக்கும் – வெறுக்கும் – கொள்கையுடன் செயற்படும் அரசியல்வாதிகளுள் விக்கிரபாகுவும் ஒருவர்.
அவர் சந்திக்க நெருக்கடிகள், அச்சுறுத்தல்கள் ஏராளம். சிங்கள புலி, துரோகி என்றெல்லாம் கடும்போக்குடைய இனவாதிகள் அவர்மீது சொற்களைகளைத் தொடுத்தனர்.

2012 இல் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னையில் நடைபெற்ற டெசோ மாநாட்டுக்கு விக்கிரமபாகு கருணாரத்னவும் அழைக்கப்பட்டிருந்தார்.

இதனால் தென்னிலங்கையில் அவருக்கு எதிராக சில தரப்பினர் போர்க்கொடி தூக்கினர், போராட்டங்களை நடத்தினர்.

எதற்கும் அவர் அஞ்சவில்லை. மாநாட்டில் பங்கேற்று, ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
தமிழர்களுக்காக மட்டுமல்ல முஸ்லிம்களுக்காகவும்  அரசியல், பொருளாதார, சமூக விடுதலைக்காகவும் பாகுவின் குரல் ஓங்கி ஒலித்துள்ளது. சம்பள உயர்வுக்கான போராட்டங்களில் பங்கேற்று தாக்குதலுக்கும் இலக்காகியுள்ளார்.
அவரிடம் இன, மத பேதம் கிடையாது, கொள்கைக்கு முதலிடம். மக்களுக்கான அரசியலை செய்தார், மக்களை வைத்து அரசியல் செய்யமுற்படவில்லை. அதனால்தான் அவர் பிரதிநிதித்துவப்படுத்திய நவ சமசமாஜக் கட்சிக்குரிய வாக்கு வங்கி குறிப்பிட்டுக் கூறும் அளவுக்கு இல்லை. ஆனால் கொள்கை மாறா அரசியல் பயணத்தால் இன்றும் போற்றப்படுகின்றார்.
ஆட்சியாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர், அரசியல் பழிவாங்கலுக்காக அவரின் விரிவுரையாளர் பதவி பறிக்கப்பட்டது. நல்லாட்சியின்போது அவருக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவை ஒப்புதலுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டுள்ளார். மேல் மாகாணசபை உறுப்பினராக இருந்துள்ளார். கடைசியாக தெஹிவளை – கல்கிசை மாநகர சபை உறுப்பினராக இருந்தார். மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியுடன் கூட்டணி வைத்து ஏணி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
அவரின் மறைவையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...