மான்செஸ்டர் விமான நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாகிஸ்தானை சேர்ந்த இளைஞர்களை காலால் கொடூரமாக தாக்கும் காணொளி ஒன்று வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தொடர்புடைய பொலிசார் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடிவாகியுள்ளது.
சமூக ஊடகங்களில் பரவலாகிவரும் வீடியோவில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நபர் ஒருவரின் தலையில் காலால் மிதிக்கின்றார்.
நபர் ஒருவர் தரையில் காணப்படுவதையும் இரண்டு பொலிஸார் அவரை நோக்கி டேசரை நீட்டுவதையும் காண்பிக்கும் வீடியோவும் வெளியாகியுள்ளது.
அதே வீடியோவில் நபர் ஒருவரை ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் தரையில் வீழ்த்துவதையும் கைகளை பின்பக்கமாக இழுத்து வைத்திருப்பதையும் ஒருவர் அந்த நபரை காலால் உதைப்பதையும் காணமுடிகின்றது.
இந்த வீடியோக்கள் வெளியானதை தொடர்ந்து பிரிட்டனில் பொலிஸார் சரியான அளவில் பலத்தை பயன்படுத்துகின்றார்களாக என்ற கேள்வி எழுந்துள்ளதுடன் சர்ச்சையும் மூண்டுள்ளது.
பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட பின்னரே இந்த சம்பவங்கள் இடம்பெற்றன பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன என மான்செஸ்டர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்கான காரணம்
பயணி ஒருவர் லக்கேஜ் டிராலியை ஃபாஹிர் என்ற இளைஞரின் தாயார் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து குறித்த பயணியுடன் ஃபாஹிரின் தாயார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மட்டுமின்றி, நடந்தவற்றை தமது பிள்ளைகளிடமும் அவர் கூறியுள்ளார்.
இதனையடுத்தே அந்த நபரிடம் ஃபாஹிர் மற்றும் அவரது சகோதரர் அமத் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. இதன் பின்னரே இந்த விவகாரத்தில் கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறை ஈடுபட்டுள்ளது.
இதேவேளை குறிப்பிட்ட வீடியோவில் காணப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் முன்னணி பணிகளில் இருந்து அகற்றப்பட்டுள்ளார்.
இதேவேளை இந்த தாக்குதலிற்கு இனவெறியே காரணம் என மெட்ரோ பொலிட்டன் பொலிசின் முன்னாள் சிரேஸ்ட அதிகாரியான டல் பாபு தெரிவித்துள்ளார்.