ஈரான் ஜனாதிபதி தேர்தலில் மசூத் பெசெஷ்கியன் வெற்றிபெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தேர்தலின் இரண்டாம் சுற்றின் முடிவில் வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் மசூத் பெசெஷ்கியானிற்கு 53வீத வாக்குகள் கிடைத்துள்ளது.
இதன் அடிப்படையில் ஜனாதிபதி தேர்தலில் அவர் வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், ஈரான் தலைநகரிலும் ஏனைய நகரங்களிலும் புதிய ஜனாதிபதியின்ஆதரவாளார்கள் வெற்றிக்கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது.
மேலும், ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி (Ebrahim Raisi) கடந்த மாதம் 19 ஆம் திகதி விபத்தில் உயிரிழந்ததையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க கடந்த 28ஆம் திகதி தேர்தல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
புதிய ஈரானை உருவாக்க தன் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் வெற்றிக்கு பிறகு நாட்டு மக்களிடம் உரையாற்றிய பெசெஷ்கியன், “நாங்கள் அனைவருக்கும் நட்பு கரம் நீட்டுவோம்.
அனைவரையும் அரவணைத்து செல்வோம். நாம் அனைவரும் இந்நாட்டு மக்கள்; நாட்டின் முன்னேற்றத்திற்கு அனைவரது பங்களிப்பும் தேவை” என்று கூறினார்.
ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள பெசெஷ்கியன் சீர்திருத்தவாதியாக அறியப்படுகிறார். இவரது ஆட்சியில் பல முக்கிய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.