பங்களாதேஷிலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் பங்களாதேஷில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
பங்களாதேஷில் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி விலக வலியுறுத்தி மாணவ அமைப்பினர் வன்முறை போராட்டத்தை நடத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
அத்தோடு, நேற்றைய தினமும் (04) ஆயிர்க்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் வன்முறை மோசமடைந்து வருவதை கருத்தில் கொண்டு தலைநகர் டாக்காவில் தொலைபேசி மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், பங்களாதேஷில் அமைதியின்மை ஏற்பட்டுள்ள போதிலும் நாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் பாதிக்கப்படவில்லை என பங்களாதேஷில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
ஏறத்தாழ 2,500 இலங்கையர்கள் பங்களாதேஷில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் ஒட்டுமொத்த இலங்கை சமூகமும் பாதுகாப்பாக இருப்பதாக உயர்ஸ்தானிகராலயம் வலியுறுத்தியுள்ளது.