காசாவில் பிறந்து நான்கு நாட்களேயான இரட்டைக் குழந்தைகள் மற்றும் தாய், பாட்டி ஆகியோர் இஸ்ரேல் நடத்திய விமான தாக்குதலில் உயிரிழந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த குழந்தைகளின் பிறப்பைப் பதிவு செய்வதற்காக தந்தை உள்ளூர் அரசாங்க அலுவலகத்தில் இருந்தபோது இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் இவர்கள் நால்வரும் கொல்லப்பட்டனர்.
அஸ்ஸர் என்ற ஆண் குழந்தையும், அய்செல் என்ற பெண் குழந்தையும் பிறந்து நான்கு நாட்களே ஆன நிலையில், அவர்களது தந்தை மொகமட் அபு அல் கும்சன் அவர்களின் பிறப்புச் சான்றிதழைப் பெறச் சென்றார்.
அதுவரை குடும்பத்தினரை பத்திரமாக பாதுகாத்து வந்த நிலையில், தனியாக விட்டு செல்வதை நினைத்து சற்று கலக்கம் ஏற்பட்டது. ஆனால் அகதிகளாக வெளியேறும் போது பிறப்பு சான்றிதழ் அவசியம். தனக்கு பிறகு தன்னுடைய குழந்தைகள் இந்த உலகில் நிம்மதியாக வாழ வேண்டும்.
அதற்கு பிறப்பு சான்றிதழ் அவசியம் என்று விரும்பியுள்ளார். அதுமட்டுமின்றி அறுவை சிகிச்சை செய்ததால் மனைவி மிகவும் சோர்வாக காணப்பட்டார். எனவே அவரையும் அழைத்து செல்வது சரியாக இருக்காது என்று கருதி வீட்டிலேயே விட்டு சென்றார். இந்நிலையில் அரசு அலுவலகத்திற்கு சென்று தனது இரண்டு குழந்தைகளுக்கும் பிறப்பு சான்றிதழ் வாங்கி கொண்டு திரும்பியுள்ளார்.
ஆனால் அதற்குள் அவரது வீட்டின் மீது இஸ்ரேல் ராணுவம் வீசிய குண்டுகள் தாக்கியிருந்தன. முகமது மஹ்தி அபு அல்-கும்சனின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்து கிடந்தனர். தற்போது தாங்க முடியாத துயரத்தில் தவித்து கொண்டிருக்கிறார்.
அவரது அயலவர்கள் அவரது வீட்டின் மீது குண்டுவீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்தனர். “என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை,” என்று அவர் கூறினார்.
“அது வீட்டைத் தாக்கிய ஷெல் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது.” “அவர்களுடன் மகிழ்ச்சியாக இருக்க எனக்கு நேரம் இல்லை,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
காசாவின் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம், போரின் போது 115 குழந்தைகள் பிறந்து பின்னர் கொல்லப்பட்டதாகக் கூறுகிறது. காசாவில் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சக தகவலின்படி, இஸ்ரேலிய தாக்குதலில் 39,790 க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.