உலக தமிழர்களை ஒருங்கிணைக்கும் வகையில் மட்டக்களப்பில் இன்று உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு கோலாகலமாக ஆரம்பமானது.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் வழிகாட்டலின் கீழ் கிழக்கு மாகாண கல்வித்திணைக்களம், பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை இணைந்து இந்த உலக தமிழ் கலை இலக்கிய மாநாட்டினை நடத்திவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் மட்டக்களப்பில் உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு தொடர்பான மலர் வெளியிடப்பட்டதுடன் மட்டக்களப்பு ஆய்வு நூலும் இந்நிகழ்வில் வெளியிடப்பட்டது.
அத்துடன் மட்டக்களப்பில் உலக தமிழ் கலை இலக்கிய மாநாட்டை குறிக்கும் வகையில் இலங்கை அஞ்சல் திணைக்களத்தினால் முத்திரையொன்றும் இதன்போது வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இம்மாநாட்டின் ஆரம்ப நிகழ்வாக கல்லடியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை ஆளுநர் செந்தில் தொண்டமான், மலேசியா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சரவணன் ஆகியோர் திறந்துவைத்தனர்.
இதனைத் தொடர்ந்து அங்கிருந்து 1000 இற்கும் மேற்பட்ட தமிழ் கலைஞர்களின் பங்குபற்றலுடன் ஊர்தி பவனி மற்றும் கலை நிகழ்வுகளுடன் வெபர் மைதானத்தை நோக்கி விழாவில் பங்குபற்றுவோரும், பொது மக்களும் நடைபவணியாக வந்தடைந்தனர்.
இரண்டாம் நாளுக்கான கலை நிகழ்வுகளும் கருத்தரங்குகளும் நாளை சனிக்கிழமை கிழக்கு பல்கலைகழகத்தில் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.