வனப்பரப்பை 30% பேணும் நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு மூன்றாம் நிலை! அரசாங்க கணக்குகள் பற்றிய குழு

Date:

மக்கள் தொகை செறிவை கிலோமீற்றருக்கு 300 ஆகவும், வனப் பரப்பை 30 சதவீதமாக  ஆகவும் பேணும் உலகநாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தில் இருப்பதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு அமைய இலங்கையை விட தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் முன்னிலையில் காணப்படுவதாக வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் இராஜாங்க அமைச்சர்  லசந்த அழகியவன்ன தலைமையில் அண்மையில்  கூடியபோதே இவ்விடயங்கள் குறித்து வெளியிடப்பட்டது.

2020,2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராய்வதற்காக வனப் பாதுகாப்புத் திணைக்களம் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தது.

உலக நாடுகளில் வனப்பரப்பளவு 31 சதவீதமாகக் காணப்படுவதுடன்,இலங்கையின் வனாந்தரப் பகுதி 30 சதவீத அளவில் இருப்பது மிகவும் நல்லதொருநிலைமையென குறித்த திணைக்களத்தின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

இலங்கையில் உள்ள முழு வனாந்தரப் பகுதியையும் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடாமைகுறித்து அதிகாரிகளிடம் குழு கேள்வியெழுப்பியது.

2018 ஆம் ஆண்டு நிலவரப்படி, சுமார் 1.4மில்லியன் ஹெக்டெயர் வனப்பகுதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன என்றும், சுமார் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ஹெக்டெயர் வனப்பகுதி வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படவில்லையென்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதன்படி, வர்த்தமானியில் வெளியிடப்படாத வனாந்தரப் பகுதிகளை விரைவில் வர்த்தமானியின் ஊடாக வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், இது பற்றிய அறிக்கையை இரண்டு மாதங்களுக்குள் குழுவுக்கு அனுப்பிவைக்குமாறும் குழுவின் தலைவர் அறிவுறுத்தினார்.

உலக பாரம்பரியமாக விளங்கும் சிங்கராஜ வனப்பகுதியை பார்வையிட இந்த ஆண்டு அதிகளவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

கடந்த சில மாதங்களில் மொத்தம் 35000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிங்கராஜ வனப்பகுதியை பார்வையிட வந்துள்ளனர்.

வனப்பகுதியை சேதப்படுத்தாமல் சுற்றுலாப்பயணிகளுக்கு தேவையான வசதிகளை அதிகரிக்க அதிகாரிகளுக்கு குழுவின் தலைவர் அறிவுரை வழங்கினார்.

Popular

More like this
Related

அரச விடுமுறையில் மாற்றம்!

2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு மே மாதம்...

A/L பரீட்சை விண்ணப்ப காலம் நள்ளிரவுடன் நிறைவு

2026 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகலில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது...

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...