பங்களாதேஷில் வெடித்த போராட்டத்தை தொடர்ந்து ஷேக் ஹசீனாவின் ஆட்சியை கவிழ்க்க முக்கிய காரணமாக இருந்த 26 வயது மட்டுமே நிரம்பிய 2 மாணவர்களின் அரசின் ஆலோசகர்களாக நியமனம் பெற்றுள்ளனர். .
அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இவர்கள் யார்? பின்னணி என்ன? என்பது பற்றி பார்க்கலாம்.
பாகிஸ்தானில் இருந்து சுதந்திரம் பெற்று புதிய நாடாக கடந்த 1971ம் ஆண்டில் பங்களாதேஷ் உருவானது. இந்த போராட்டத்தில் பங்கேற்று உயிரிழந்த தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலை, கல்வியில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்க அந்த நாட்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் முதல் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் காரணமாக கடந்த 5 ம் தேதி வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை இராஜினாமா செய்து நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார்.
கடந்த 2009 முதல் 15 ஆண்டுகளாக தொடர்ந்து பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது.
இதையடுத்து இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனிஸ் தேர்வு செய்யப்பட்டார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மருத்துவ சிகிச்சையில் இருந்த இவர் நேற்று நாடு திரும்பினார். இதையடுத்து முகமது யூனிஸ் இடைக்கால அரசின் தலைவராக நேற்று பதவியேற்றார்.
முகமது யூனுஸ் தலைமையிலான இந்த இடைக்கால அரசில் 16 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் இந்த இடைக்கால அரசில் இடம்பெற்றுள்ள 2 பேர் அதிக கவனம் பெற்றுள்ளனர்.
ஷேக் ஹசீனாவின் ஆட்சி கலைய காரணமாக போராட்டத்தை முன்னெடுத்தவர்கள். அவர்களின் பெயர்கள் நஹித் இஸ்லாம் மற்றும் ஆசிப் மஹ்மூத். இவர்கள் 2 பேருக்கும் வெறும் 26 வயது தான் ஆகிறது.
இவர்கள் டாக்கா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ஆவார்கள். இடஒதுக்கீடு எதிராக போராட்டத்தை முன்னெடுத்தவர்களிடம் இவர்கள் 2 பேரின் பங்கு மிகப்பெரியது.
இதனால் தான் அவர்கள் 2 பேரும் இடைக்கால அரசின் ஆலோசகர்களாகவும், அமைச்சர் பொறுப்பிலும் நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் 2 பேரும் நேற்று பதவி பிரமாணம் எடுத்து கொண்டனர்.
இதில் நஹித் இஸ்லாம் சமூகவியல் (Sociology) பிரிவில் முதுகலை பட்டப்படிப்பை படித்து வருகிறார். இவர் நூருல் ஹக் நூர் தலைமையிலான சத்ர ஓதிகார் பரிஷத்தில் இருந்து பிரிந்து சென்றவர்களால் உருவாக்கப்பட்ட கனோதந்திரிக் சத்ர சக்தியின் உறுப்பினர் செயலாளராக உள்ளார். அதேபோல் ஆசீப் மஹ்மூத் linguistics பிரிவு மாணவர். இவர் நஹித் இஸ்லாமியின் நெருங்கிய நண்பர். கனோதந்திரிக் சத்ர சக்தியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறார்.
முன்னதாக இவர்கள் 2 பேரும் ஷேக் ஹசீனாவின் அடக்குமுறைக்கு ஆளாகினர். அதாவது போராட்டத்தை முன்னெடுத்த மாணவ பிரதிநிதிகள் சித்ரவதை செய்யப்பட்டனர்.
போராட்டத்தை தொடர்ந்து முதல் முறையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட இவர்கள் 2 பேரையும் Detective Branchயை சேர்ந்தவர்கள் அழைத்து சென்றனர். அப்போது தான் இவர்களின் பெயர்கள் வெளியே வந்தது.
அதன்பிறகு சித்ரவதை செய்யப்பட்டு சாலையோரத்தில் விடப்பட்டனர். இதுதொடர்பான விவகாரம் வெளியாகி பெரும் கொந்தளிப்பை மாணவர்கள் மத்தியில் உருவாக்கியது.
அதன்பிறகு நஹித் இஸ்லாம் மற்றும் ஆசிப் மஹ்மூத் உள்பட 6 போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கோனோஷஸ்தயா நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சிகிச்சை முடிந்த பிறகு அவர்கள் போராட்டத்தை கைவிடுவார்கள் என நினைத்த நிலையில் அவர்கள் விடவில்லை. ஜூலை 30ல் மீண்டும் Detective Branch அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.
மீண்டும் கைது செய்யப்பட்ட நிலையில் போராட்டத்தை கைவிடுவதாக போலீசார் வற்புறுத்தலால் வீடியோ வெளியிட்டனர். அதன்பிறகு ரிலீசான பிறகு மீண்டும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஷேக் ஹசீனா தரப்புக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர்.
அதுமட்டுமின்றி அதுவரை இடஒதுக்கீட்டுக்கு எதிராக இருந்த போராட்டம் என்பது ஷேக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டமாக மாற இவர்கள் 2 பேரும் தான் முக்கிய காரணமாகும்.
இந்நிலையில் தான் இடைக்கால அரசின் இளம் ஆலோசகர்களாக பதவியேற்ற பிறகு நஹித் இஸ்லாம் கூறுகையில், ‛‛பங்களாதேஷ் இளைஞர்களின் கையில் இருந்தால் ஒருபோதும் இலக்கில் இருந்து தடம் மாறாது. இளைஞர்களின் இன்று வீதிக்கு வந்து போராட்டம் நடத்தி வென்றுள்ளனர்.
பல இளைஞர்கள் உயிர் தியாகம் செய்துள்ளனர்.இளைஞர்கள் அரசின் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் என்று மக்கள் நினைத்தால் அதற்கும் தயாராக இருக்கிறார்கள். தற்போதைய இடைக்கால அரசு என்பது இளைஞர்கள் மற்றும் அனுபவசாலிகளின் கலவையாக உள்ளது.
இதனால் இந்த அரசு நிச்சயம் அனைத்து தரப்பு மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும். நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம். வங்கதேச மக்கள் நீண்ட காலமாக வாக்களிக்கும் உரிமையை இழந்துள்ளனர். வாக்களிக்கும் உரிமையை உறுதி செய்வதன் மூலம் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதே இந்த அரசாங்கத்தின் முக்கிய நோக்கம்” என்றார்.
அதேபோல் ஆசீப் மஹ்மூத் கூறுகையில், ‛‛நம் நாட்டின் இடைக்கால அரசின் இளம் ஆலோசகர்களாக சவாலை ஏற்க தயாராக இருக்கிறேன். பாசிச அரசாங்கத்தின் கீழ் அனைத்து அரசு நிறுவனங்களும் அழிந்துவிட்டன.
இந்த நிறுவனங்களை சீர்திருத்துவதன் மூலம் பாசிசத்தை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். கடந்த 17 ஆண்டுகளாக பிரதான கட்சிகளால் எதேச்சதிகார அரசை அகற்ற முடியவில்லை. ஆனால் மாணவர்கள் போராட்டம் மூலம் வெறும் 4 நாட்களில் அதனை செய்து காட்டி உள்ளோம். இன்றைய இளம் தலைமுறையினரால் ஆர்வமாகவும், நாட்டு பற்றுடனும் நாட்டுக்கு சேவை செய்ய முடியும் என்பதை நாங்கள் நிரூபிப்போம்” என்றார்