புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற அநுர குமார திஸாநாயக்கவினால் அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு இன்று(24) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறுகின்றது.
அதற்கமைய, புதிய பிரதமராக தேசிய மக்கள் சக்தியின் ஹரினி அமரசூரிய பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
அவர் இலங்கையின் பிரதமராக பதவியேற்கும் 3ஆவது பெண் ஆவார்.
இதற்கு முன்னதாக உலகின் முதல் பெண் பிரதமரான ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகியோர் இலங்கையின் பிரதமராக பதவி வகித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சரவையின் தலைவரான ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் விஜித ஹேரத், லக்ஸ்மன் நிபுண ஆரச்சி உள்ளிட்ட மொத்தமாக 4 பேரிடையே அமைச்சுகள் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி, இலங்கை வரலாற்றில் பிரதமராக பதவியேற்கும் மூன்றாவது பெண்மணி என்ற பெருமையை ஹரிணி அமரசூரிய பெற்றுள்ளார்.
முன்னதாக சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் இந்த நாட்டின் பிரதமர்களாக பதவி வகித்துள்ளனர்.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கு தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினராக கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவு செய்யப்பட்டார்.
1970ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6 ஆம் திகதி பிறந்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, அரசியல்வாதியாக மாறுவதற்கு முன்னர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உயர்கல்வி கற்றவர்.
எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் சமூக மானுடவியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
2011 ஆம் ஆண்டு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தில் உறுப்பினராக இணைந்த பின்னர், இலவசக் கல்விக்கான போராட்டங்களில் கலந்து கொண்ட சமூக ஆர்வலரும் ஆவார்.
பல வருடங்கள் சிறுவர் பாதுகாப்பு மற்றும் உளவியல் வைத்தியராக பணியாற்றிய பின்னர், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சமூக விஞ்ஞான துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராக இணைந்து கொண்டார்.
ஹரிணி அமரசூரிய 2019 ஆம் ஆண்டு தேசிய புத்திஜீவிகள் அமைப்பில் இணைந்தார். அதே வருடம் ஜனாதிபதி தேர்தலின் போது தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்கவுக்காக பிரச்சாரம் செய்தார்.
12 ஆகஸ்ட் 2020 அன்று, இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் முதல் முறையாக நாட்டின் 16வது நாடாளுமன்றத்தில் நுழைவதற்காக தேசியப் பட்டியல் வேட்பாளராக தேசிய மக்கள் சக்தியால் அவர் பரிந்துரைக்கப்பட்டார்.