லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் கடந்த வெள்ளிக்கிழமை (27) இடம்பெற்ற பாரிய வான் தாக்குதலில் காயமடைந்த 40 வயதான இலங்கை பிரஜை ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர் ஆபத்தான நிலையில் இல்லை என பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதரகமும் வெளிவிவகார அமைச்சும் நேற்று (29) தெரிவித்தன.
லெபனானுக்கான இலங்கைத் தூதுவர் கபில ஜெயவீரவின் கூற்றுப்படி,
கடந்த வெள்ளிக்கிழமை ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் உயிரைப் பறித்த இஸ்ரேலிய விமானப்படை தாக்குதலில் இலங்கையர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த இலங்கையர் பெய்ரூட்டில் உள்ள ரஃபிக் ஹரிரி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தற்ற நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பாதிக்கப்பட்டவர் தெற்கு களுத்துறையைச் சேர்ந்த மொஹமட் ராசிக் எனவும் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் ஆபத்தான நிலையில் இல்லை எனவும் தூதுவர் ஜயவீர தெரிவித்தார்.
“நான் அவரைச் சந்தித்தேன், அவரிடம் சுருக்கமாகப் பேசினேன். அவரது சிகிச்சை குறித்து மருத்துவ ஊழியர்களிடமும் விவாதித்தேன். அதிர்ஷ்டவசமாக அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை. மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் ராசிக்கை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவருக்குத் தேவையான சிகிச்சையைப் பெற உதவிய அனைவருக்கும் நாங்கள் நன்றி கூறுகிறோம், ”என்று ஜெயவீர தெரிவித்தார்.
இதேவேளை ராஸிக்கின் குடும்பத்திற்கு அவரது உடல்நிலை குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தாக்குதல்கள் தீவிரமடைந்தபோது பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதரகத்திடம் தஞ்சம் புகுந்த கிட்டத்தட்ட 25 இலங்கையர்கள் இரண்டு தேவாலயங்கள் மற்றும் கத்தோலிக்க அரச சார்பற்ற நிறுவனமான கரித்தாஸ் (Caritas) ஆகியவற்றில் உள்ள பாதுகாப்பு இல்லங்களுக்கு மாற்றப்பட்டதாக ஜெயவீர தெரிவித்தார்.
லெபனானில் உள்ள தூதரகத்தில் கிட்டத்தட்ட 7,600 இலங்கையர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சு மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றுடன் இணைந்து ஆபத்தில் உள்ள இலங்கையர்களுக்கு நிவாரணம் மற்றும் ஆதரவை ஒருங்கிணைத்து வருவதாக தூதுவர் ஜெயவீர வலியுறுத்தினார்.