ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற போது இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
ஆனாலும் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் முத்த உறுப்பினரான சிவஞானம் சிறிதரன் ஆகியோர் தமிழ் பொது வேட்பாளரான பா.அரியநேத்திரனுக்கு ஆதரவு வழங்கி வருகின்றனர்.
இதேவேளை, தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்க வேண்டுமென இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையில் கடந்த வெள்ளிக்கிழமை தீர்மானிக்கப்பட்டது.
தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் உபதலைவரும், வடக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சருமான தம்பிராசா குருகுலராஜா தலைமையில் மாவட்டக் கிளை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்களின் பங்கேற்போடு நடைபெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டது.
இதன்போது கட்சியின் நிலை இதுவரை தனக்கு உத்தியோகபூர்வமான அறிவிப்புக்கள் எதுவும் கிடைக்கவில்லை என அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா சுட்டிக்காட்டினார்.
மேலும், இதனை தமிழரசுக்கட்சியின் உத்தியோகபூர்வமான அறிவிப்பு என்று ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் திட்டவட்டமாக அறிவித்தார்.