ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா இஸ்ரேல் விமான தாக்குதலில் கொல்லப்பட்டதை அடுத்து ஈரானின் ஆன்மிக தலைவர் இரகசிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானில் பெயர் குறிப்பிடப்படாத அதிக பாதுகாப்புள்ள இடத்துக்கு காமேனி மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் ஹிஸ்புல்லாவுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளோம் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கலந்தாலோசித்து வருவதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் மரணத்தோடு தங்களின் தாக்குதலை முடித்துக் கொள்ளப்போவதில்லை என்று இஸ்ரேல் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
ஹிஸ்புல்லாவுக்கு மறக்க முடியாத பாடத்தை கற்றுக்கொடுக்காமல் தாங்கள் பின்வாங்கப்போவதில்லை என்று அவர் சூளுரைத்துள்ளார்.
ஹிஸ்புல்லா தலைமையகம் மற்றும் நஸ்ரல்லாவின் மீதான இந்த தாக்குதல் பல நாட்களாக திட்டமிடப்பட்டதாகவும், சரியான நேரத்திற்காக காத்திருந்து தற்போது தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேலிய இராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தலைவர் கொல்லப்பட்டதால் எந்நேரமும் இஸ்ரேல் மீது பெரிய அளவிலான தாக்குதலை ஹிஸ்புல்லா நடத்தலாம் என்பதால் இஸ்ரேல் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இஸ்ரேலின் பெய்ரூட் தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.