மக்களுடைய வாக்குகளால் நியமிக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சம்பள கொடுப்பனவு, ஓய்வூதியம், உத்தியோகப்பூர்வ இல்லம், வாகனங்கள், பணியாட்கள், அலுவலக உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக குழுவொன்றை நியமிப்பதற்கு பிரதமர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான இத்தகைய கொடுப்பனவுகளுக்காக மக்களுடைய வரிப்பணத்திலிருந்து அரசாங்கம், வருடாந்தம் பெருமளவில் செலவு செய்கின்றது.
தற்போதைய நிதி நிலையில்,மேலதிக செலவுகளை குறைக்கவேண்டிய தேவை இருப்பதனால் இவ்வாறான கொடுப்பனவுகளை தொடர்வது மற்றும் தொடர்ந்து வழங்குவது தெடர்பில் பொருத்தமான விதந்துரைகளின் கூடிய விபரமான அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்காக இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாதங்கள் அதற்கென இவர்களுக்கு காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
குழுவின் தலைவராக ஓய்வு நிலை உயர்நீதிமன்ற நீதியரசர் கே.டி சித்ரசிறி அவர்களும் மற்றும் ஓய்வு நிலை அமைச்சின் செயலாளர் டி. திசாநாயக்க அவர்களும் ஓய்வு நிலை மாவட்டச் செயலாளர்/ அரசாங்க அதிபர் திருமதி ஜயந்த சி.டி புலுமுல்ல (Jayantha C.T. Bulumulla) அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.