இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு ஆதரவாக அமெரிக்க ஊடகங்கள் செயல்பட்டதாகக் கூறி அமெரிக்க ஊடகவியலாளர் சாமுவேல் மேனா தன் கைகளை தீ வைத்து எரித்துக்கொண்டார்.
காசா மீது இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதலின் ஒரு வருடத்தைக் குறிக்கும் வகையில் அக்டோபர் 5 அன்று வாஷிங்டன் டி.சி பகுதியில் வெள்ளை மாளிகைக்கு அருகில் ஆர்ப்பாட்டம் மற்றும் பலஸ்தீனத்திற்கு ஆதரவளிக்கும் பேரணி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு ஊடகவியலாளர் சாமுவேல் மேனா (Samuel Mena) உரையாற்றினார்.
“அமெரிக்க பத்திரிகையாளர்களாகிய நமது அலட்சியத்தாலும் நம்முடைய அரசாங்கத்தின் செல்வாக்கின் காரணமாகவும் உண்மைகளை மறைத்து பலஸ்தீன மக்களைப் படுகொலை செய்யும் கருவியாக நாம் இருந்திருக்கிறோம்.
அமெரிக்க ஊடகங்கள் இஸ்ரேலின் காசா மீதான போரை ஹமாஸ் மீதான தாக்குதலாக மாற்றுகின்றன. இஸ்ரேலின் இனவெறி போருக்கு ஆதரவான கருத்துகளை வெளியிட்டு வருகின்றன. நான் இனிமேலும் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு உடந்தையாக இருக்க மாட்டேன். நான் ஒரு தீவிர எதிர்ப்பு செயலில் ஈடுபடப் போகிறேன்” என்று தெரிவித்தார்.
மேலும் “ஹமாஸ் அமைப்பினர் என்று முத்திரை குத்தப்பட்டு எத்தனை பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டார்கள். எத்தனை பெண்கள் ஆண்கள் குழந்தைகள் அமெரிக்காவால் ஊடகங்களின் ஆதரவுடன் ஏவுகணைகளால் கொல்லப்பட்டுள்ளனர்.
பலஸ்தீன குழந்தைகள் தங்களுடைய எரிந்த வீட்டின் சாம்பலிலிருந்து எழுந்து தங்கள் அன்புக்குரியவர்களைக் கொலை செய்தவர்களுக்கு எதிராகப் பழிவாங்குவதற்காக நிற்கிறார்கள்.
நான் வீடு என்று நினைக்கும் அரிசோனா மாகான மக்களுக்குச் சேவை செய்வதற்காகப் பத்திரிகைத் துறையில் சேர்ந்தேன் ஆனால் தற்போது தான் அமெரிக்கா ஊடகங்கள் பற்றித் தெரிந்து கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
அதன் பின்பு வெள்ளை மாளிகைக்கு அருகில் இஸ்ரேலுக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு “இஸ்ரேலின் தாக்குதலினால் கால்களை இழந்த பத்தாயிரம் குழந்தைகளுக்கு எனது இடது கையை வழங்குகிறேன்” என்று தெரிவித்துத் தீக்குளித்துள்ளார். உடனடியாக அருகிலிருந்த அதிகாரிகள் அவரை பலத்த காயங்களுடன் மீட்டு மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர்.
சாமுவேல் மேனாவின் பேச்சுக்குப் பிறகு அவரை ஊடக நிறுவனத்திலிருந்து வெளியேற்றுவதாக அமெரிக்க ஊடக நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு வருடமாகப் பாலஸ்தீனத்தின் மீது கொடூரமான தாக்குதலை நடத்தி வருகிறது இஸ்ரேல். இதுவரை 41.615-க்கும் மேற்பட்டோரைப் படுகொலை செய்துள்ளது, இதில் 16.756க்கும் மேற்பட்டோர் குழந்தைகள். 17,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களின் பெற்றோரை இழந்துள்ளனர்.