முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை மீளாய்வு செய்வதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய குழு, முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமை மற்றும் அவர்களின் தேவை தொடர்பாக எழுத்து மூல அறிக்கை சமர்ப்பிக்குமாறு அவர்களுக்கு அறிவித்துள்ளது.
இதற்கமைய முன்னாள் ஜனாதிபதிகள் சிலரும் ஏற்கனவே இந்த குழுவிடம் விடயங்களை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் கே.டி.சித்திரசிறி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில் ஓய்வுபெற்ற அமைச்சின் செயலாளர் டி.திசாநாயக்க, ஓய்வுபெற்ற மாவட்ட செயலாளர் ஜயந்த புலுமுல்ல ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். இது தொடர்பாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிக்கையில், இந்தக் குழுவால் தயாரிக்கப்பட்ட அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு சிறப்புரிமை தொடர்பாக தேவையான தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றார்.
இவர்களின் பாதுகாப்பு பிரிவுகளுக்கு வாடகை அடிப்படையில் கட்டடங்கள் பெறப்பட்டிருந்தால், மாதாந்த வாடகை மற்றும் வழங்கப்பட்டுள்ள வசதிகள் தொடர்பாகவும் இந்தக் குழு ஆராயுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மனைவி ஹேமா பிரேமதாச ஆகியோரின் இந்த சிறப்புரிமைகளுக்காக மூன்று வருடங்களில் (2022 – 2024) செலவிடப்பட்ட தொகை மத்திய வங்கி பதிவுகளுக்கமைய இருபத்து ஏழு கோடி ரூபாவென தெரியவந்துள்ளது.
2022ஆம் ஆண்டில் இந்தக் குழுவினரின் பராமரிப்புக்காக செலவிடப்பட்ட தொகை ஏழு கோடி ரூபாவென அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டில் இத்தொகை எட்டு கோடி ரூபாவிலிருந்து 11 கோடி ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.