அமெரிக்கா ஜனாதிபதித் தேர்தல் 50 மாகாணங்களில் இன்று தேர்தல் நடைபெறுகிறது.
மாகாணங்களுக்கு இடையே நேர வித்தியாசம் உள்ள நிலையில் வெவ்வேறு நேரங்களில் தேர்தல் நடைபெறுகிறது.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் இந்த முறை ஜனநாயக கட்சி சார்பாக துணை அதிபர் கமலா ஹாரிஸ் களமிறக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் குடியரசு கட்சி சார்பாக முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் களமிறக்கப்பட்டு உள்ளார். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
அமெரிக்காவில் புவியியல் அமைப்பு படி 4 வகையான நேர விகிதங்கள் பின்பற்றப்படுகிறது.
அதாவது மாகாணங்களுக்கு இடையே, ஒரு மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை வித்தியாசம் உள்ளது.
இலங்கை, இந்திய நேரப்படி பார்த்தால், நமது நாட்டிற்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான நேர வித்தியாசம் 10.30 மணி நேரம் ஆகும்.
அமெரிக்காவில் இன்று (நவம்பர் 5) காலை 6 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது என்றால் இலங்கை, இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்கும்.
வெற்றியாளரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க ஜனவரி 6ஆம் திகதி காங்கிரஸ் சபை அமெரிக்காவில் கூடும், புதிய ஜனாதிபதி ஜனவரி 20ம் தேதி பதவியேற்பார்.
தேர்தல் எப்படி நடக்கும்:
அமெரிக்காவில் மொத்தம் 538 எலக்ட்ரல் வாக்குகள் உள்ளன. இதில் 270 வாக்குகளை ஜனாதிபதி வேட்பாளர் பெற வேண்டும்.
பெரும்பான்மை 50 மாகாணங்களில் மொத்தம் உள்ள 538 பிரதிநிதிகளில் 270க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளை அதாவது எலக்ட்ரல் வாக்குகளை பெறும் வேட்பாளரே அடுத்த அதிபராக தேர்வு செய்யப்படுவார்.
கிட்டத்தட்ட 11 கோடி வாக்காளர்கள் இன்று வாக்களிக்க உள்ளனர். மொத்தம் 18.65 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், முன்கூட்டியே வாக்களிக்கும் வசதியை பயன்படுத்தி 7 கோடி பேர் வாக்களித்துள்ளனர்.