இலங்கையில் கண் தொடர்பான குறைபாடுகளை போக்கும் வகையில் சவூதி அரேபிய அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்திட்டங்களின் ஒரு பகுதியாக மற்றுமொரு கண் சிகிச்சை முகாம் வலஸ்முல்லையில் செவ்வாயன்று (5) நடைபெற்றது.
சவூதி அரேபியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் சிறப்பான உறவுகளின் அடிப்படையிலும், உலகம் முழுவதிலும் உள்ள குறைந்த வருமானம் பெருகின்ற மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களைப் போக்க சவூதி அரேபியா அரசு மேற்கொள்ளும் மனிதாபிமான முயற்சிகளின் அடிப்படையிலும், சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் நிவாரண மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான மையம், இலங்கையில் மேற்கொள்ளும் மனிதாபிமானப் பணிகளின் தொடராக இந்தக் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இலங்கையின் தெற்கு பகுதியில் உள்ள “வாலஸ்முலை” அரசு மருத்துவமனையில் கண் பார்வையோடு தொடர்பான நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் இந்தத் தன்னார்வத் திட்டம் இம்மாதம் 4ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தினூடாக பல ஆயிரக்கணக்கான நோயாளர்களுக்கான கண்பார்வை பரிசோதனை, அவர்களுக்கான மருத்துவ சேவைகள், தேவையானவர்களுக்கான அறுவைச் சிகிச்சைகள், தேவையான மருந்துகளை வழங்குதல், வெண்படலங்களை அகற்றுதல், கண்ணீர் குழாய்களில் ஏற்படும் தடுப்புக்களுக்குச் சிகிச்சையளித்தல், நோயாளிகளுக்குத் தேவையான மருந்து வகைகள் மற்றும் மூக்குக் கண்ணாடிகள் போன்றவற்றை வழங்குதல் என்பன இடம்பெறும்.
6 நாட்கள் நடைபெறும் இந்தக் கண் சிகிச்சை முகாமில் இரண்டாம் நாளான நவம்பர் 5, 2024, செவ்வாய்கிழமை அன்று வரை 4500 மருத்துவப் பரிசோதனைகளும் 115 அறுவைச் சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு 600 கண்ணாடிகளும் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இது போன்றதொரு தன்னார்வத் திட்டம் இவ்வருடம் மே மாதம் இலங்கையின் கிழக்குப் பகுதியில் காத்தான்குடிப் பிரதேசத்திலும் மேற்கொள்ளப்பட்டது.