காசா மீது தாக்குதல்: போலியோ முகாமுக்கு வந்த குழந்தைகள் உட்பட 6 பேர் காயம்; உலக சுகாதார அமைப்பு கண்டனம்

Date:

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் போலியோ முகாமுக்கு வந்த குழந்தைகள் உட்பட 6 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்துக்கு உலக சுகாதார அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தி பலரை கொன்றும், பணய கைதிகளாக பிடித்து சென்றதற்கும் பதிலடி கொடுக்கும் வகையில் காசா மீது இஸ்ரேல் பாதுகாப்பு  படை தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

இதில், ஹமாஸ் அமைப்பினர் மற்றும் பலஸ்தீனியர்கள் என ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தும் உள்ளனர்.

இந்த சூழலில், காசாவில் உள்ள குழந்தைகளுக்கு அவர்களுடைய நலன்களை கவனத்தில் கொண்டு போலியோ சொட்டு மருந்து வழங்கும் மையங்களை நடத்த முடிவானது. இதன்படி, காசாவின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் 2 கட்ட சொட்டு மருந்து முகாம் நடத்தியதில், 4,51,216 குழந்தைகள் பலன் பெற்றுள்ளனர். இது இந்த பகுதிகளில் 96 சதவீதம் என்ற அளவில் உள்ளது.

இந்த சூழலில், 3-வது கட்ட சொட்டு மருந்து வழங்கும் முகாம்களை நடத்த முடிவானது. கடந்த அக்டோபர் 23ஆம் திகதி நடக்க இருந்த இந்த முகாம் பின்னர் தள்ளி வைக்கப்பட்டது.

இதன்படி, நேற்று இந்த முகாம் நடத்தப்பட்டது. இதற்காக, காசாவின் வடக்கே ஷேக் ரத்வான் முதன்மை சுகாதார நல மையத்தில், தங்களுடைய குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்காக பெற்றோர்கள் சென்றிருந்தனர்.

இந்நிலையில், இந்த மையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 4 குழந்தைகள் உள்பட 6 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு உலக சுகாதார அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி அந்த அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானம் கெப்ரியேசஸ் வெளியிட்ட செய்தியில், போலியோ சொட்டு மருந்து முகாமுக்காக போர்நிறுத்தம் ஏற்படுவதற்கான ஒப்புதலுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், இந்த தாக்குதல் சம்பவத்தில் 4 குழந்தைகள் உள்பட 6 பேர் காயமடைந்து உள்ளனர்.

இந்த சமீபத்திய தாக்குதல் ஆனது, குழந்தைகளுக்கு சுகாதார பாதுகாப்பு அளிப்பதற்கான புனித தன்மைக்கு தீங்கு ஏற்படுத்துவது ஆகும் என அவர் தெரிவித்து உள்ளார்.

இதனால், இந்த மையத்திற்கு பெற்றோர் வருவதற்கு இடையூறு ஏற்படும். இந்த பகுதியில் போர்நிறுத்தம் ஏற்படுத்தியதற்கான விசயங்கள் மதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...