தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 240 கி.மீ தொலைவிலும், காங்கேசன்துறைக்கு கிழக்கே 290 கி.மீ தொலைவிலும் நேற்றிரவு இரவு 11.30 மணியளவில் நிலைகொண்டிருந்தது.
இது நேற்று முதல் வடமேற்கு திசையில் தமிழகக் கடற்கரையை நோக்கி நகர ஆரம்பித்திருந்தது.
இதனால், இன்று (29) முதல் நாட்டில் இதன் தாக்கம் படிப்படியாக குறையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
எனினும் இன்று வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
வட மாகாணத்தின் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்.
மாலை அல்லது இரவில் தீவின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
வடக்கு, வடமத்திய, வடமேற்கு, கிழக்கு, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்று வடமேற்கு திசையிலிருந்து மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும்.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணிக்கு (40-50) கிலோமீற்றர் வரை காணப்படும்.
புத்தளத்திலிருந்து காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (60-70) கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.