பிரசவத்தின் போது தாயும், சேயும் உயிரிழப்பு: துரித விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சுகாதார அமைச்சர் பணிப்பு!

Date:

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்தின் போது தாயும் சேயும் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை (19) பிரசவத்தின் போது தாயும், சேயும் உயிரிழந்திருந்தனர்.

இந்த மரணத்திற்குக் காரணம் வைத்தியசாலையின் கவனயீனம் என உயிரிழந்த 28 வயதுடைய தாயின் உறவினர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

எனவே இது தொடர்பில் சுகாதார அமைச்சு உரிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

மன்னார் பட்டித்தோட்டம் பகுதியை சேர்ந்த 28 வயதான வனஜா என்ற திருமணமாகி 10 வருடங்களே ஆன இளம் தாயே மன்னார் வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

முன்னதாகவே குறித்த பெண்ணுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டிருந்த போதிலும் உரிய விதமாக கவனிக்கப்படவில்லை எனவும் பெண் தனக்கு சிசேரியன் செய்யுமாறு கோரிக்கை விடுத்ததாகவும், வைத்தியர்கள் இயற்கை முறையில் பிரசிவிக்க முயற்சித்த நிலையில் தாயும் பிள்ளையும் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் கவனயீனத்தாலேயே குறித்த மரணம் இடம் பெற்றுள்ளதாகவும் மரணம் அடைந்த விடயத்தை நீண்ட நேரமாக உறவினர்களுக்கு சொல்லாமல் மறைத்ததாகவும் உயிர் இழந்த பெண்ணின் உடலை கூட பார்ப்பதற்கு பெற்றோரை அனுமதிக்கவில்லை எனவும் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறித்த பெண்ணின் மரணத்துக்கு உண்மையான காரணம் என்ன என தெரிவிக்கும் வரை உயிரிழந்த பெண்ணின் உடலை பெற்றுக்கொள்ள போவதில்லை என உறவினர்கள் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் சம்பவ இடத்தில் பொதுமக்கள்,பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் கூடியிருந்த போதிலும் வைத்தியசாலை பணிப்பாளர், பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளோ சம்பவ இடத்திற்கு நீண்ட நேரம் வருகை தரவில்லை எனவும் அவருடைய தொலைபேசியும் இயங்கவில்லை என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குறித்த பிரசவ விடுதியில் பணிபுரியும் சில ஊழியர்கள் தொடர்சியாக கவனயீனமாக செயற்படுவதாகவும் வேலை நேரத்தில் நாடகங்கள் பார்ப்பதாகவும், தொலைபேசிகளை அதிகம் பயன்படுத்துவதாகவும், பிரசவ விடுதிக்குள் நாய்கள் நிற்பதாகவும் அவற்றை கூட அவர்கள் கண்டு கொள்வதில்லை எனவும் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான பின்னனியில் மன்னார் பொது வைத்தியசாலையில் பிரசவ விடுதியில் கவனயீனத்தால் இவ்வருடத்தில் இடம் பெற்ற மூன்றாவது மரணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...