இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்றையதினம் (25) ஆரம்பமாகவுள்ளது.
அதன்படி இன்று முதல் டிசம்பர் 20ம் திகதி வரை 22 நாட்களுக்கு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்காக 2,312 பரீட்சை நிலையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
இம்முறை பரீட்சைக்கு 333,185 மாணவர்கள் தோற்றவுள்ளதுடன், அவர்களில் 253,390 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் ஆவதுடன் 79,795 பேர் தனியார் பரீட்சார்த்திகள் ஆவர்.
பரீட்சைகள் காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக செல்லுபடியாகும் அடையாள அட்டையுடன் பரீட்சை நிலையங்களுக்கு செல்லுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர (Amith Jayasundara) பரீட்சார்த்திகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
பரீட்சைக்கு தோற்றுவதற்கு முன்னர் அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள பரீட்சார்த்தியின் கையொப்பத்தை தகுதியான ஒருவரால் சரிபார்க்க வேண்டியது அவசியமானது எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
உயர்தரப் பரீட்சையின் போது காலநிலையினால் ஏற்படும் இடையூறுகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டால் 117 என்ற துரித இலக்கத்திற்கோ அல்லது, பரீட்சைகள் திணைக்களத்தின் துரித இலக்கமான 1911 இற்கோ அழைக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.