வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (10.12.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளது.
மேலும், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல், மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
இதேவேளை, குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுவதுடன் மேற்கு – வடமேற்குத் திசையில் நகர்ந்து டிசம்பர் 11ஆம் திகதியளவில் இலங்கை – தமிழ்நாடு கரைகளுக்கு அப்பாற்பட்ட தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளை அடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.