இழுபறி நீடித்த சம்பியன்ஸ் கிண்ண தொடரின் போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் குழு நிலைப் போட்டி டுபாயில் பெப்ரவரி 23 ஆம் திகதி நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எட்டு அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் பாகிஸ்தான் மற்றும் பொதுவான மைதானமாக டுபாயில் 2025 பெப்ரவரி 19 தொடக்கம் மார்ச் 9 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
நடப்புச் சம்பியன் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுடன் நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் ‘ஏ’ குழுவில் இடம்பெற்றிருப்பதோடு இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் ‘பி’ குழுவில் இடம்பெற்றுள்ளன.
தொடரின் ஆரம்பப் போட்டிகளாக பெப்ரவரி 19 இல் கராச்சியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்துடன் மோதவிருப்பதோடு அடுத்த தினத்தில் (20) டுபாயில் இந்திய அணி பங்களாதேஷை எதிர்கொள்ளவுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் பதற்றத்திற்கு மத்தியில் இந்திய அணி பாகிஸ்தான் வர மறுத்ததை அடுத்து போட்டியை நடத்துவதற்கான பொதுவான இடமாக டுபாயை பாக். கிரிக்கெட் சபை தேர்வு செய்தது.