இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரரின் வழக்கு இன்று (19) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றில் ஆஜராகாததால் அவரை கைது செய்து ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்பு இன்று (19) அறிவிக்கப்பட இருந்தது.
ஆனால் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது ஞானசார தேரர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. சுகயீனம் காரணமாக அவரால் நீதிமன்றில் ஆஜராக முடியாது என ஞானசார தேரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன, வழக்கின் தீர்ப்பை ஜனவரி 9 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
இதன்படி ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.