இலங்கைக்குள் நுழைந்த “டெர்மினேட்டர்” என்று அடையாளம் காணப்பட்ட இஸ்ரேலிய படை வீரர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக செனல் 12 ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
காசாவில் பலஸ்தீன ஒருவரைக் கொடூரமாக கொலை செய்த குற்றச்சாட்டிற்காக “டெர்மினேட்டர்” எனப்படும் கால் ஃபெரன்புக் என்ற படைவீரரை கைது செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த படை வீரரின் புகைப்படத்தை வெளியிட்டு பெல்ஜியத்தை தளமாகக் கொண்ட ஹிந்த் ரஜப் எனும் அறக்கட்டளை, (The Hind Rajab Foundation) அவரை கைது செய்யுமாறு இலங்கை அதிகாரிகள், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் சர்வதேச பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளது.
இந்தநிலையில், கைது செய்யப்படுவதற்கு முன்னர் கொழும்பை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேலிய அதிகாரிகளிடமிருந்து ஃபெரன்புக்கிற்கு அவசர அழைப்பு வந்ததாக செனல் 12 தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்குத் திரும்பியதும் ஃபெரன்புக் ஒழுங்கு நடவடிக்கை அல்லது குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டுமா என்பது தொடர்பில் செனல் 12 கேள்வி எழுப்பியுள்ளது.
“தங்களால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தமதுபடைவீரர்களைப் பாதுகாக்க கிடைக்கக்கூடிய அனைத்து வழிகளையும் பயன்படுத்துவதாக” இஸ்ரேலிய பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்குத் திரும்பியதும் ஃபெரன்புக் ஒழுங்கு நடவடிக்கை அல்லது குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடுமா? என்பதைக் குறிப்பிட இராணுவம் மறுத்துள்ளது.