2025 ஆம் ஆண்டிற்கான எமது நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களின் பிள்ளைகளுக்கு சீருடைகளை வழங்கியமைக்காக சீன அரசாங்கத்திற்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிப்பதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகளுக்காக 11,817 மில்லியன் மீற்றர் துணி தேவையாகவுள்ளதுடன், பாடசாலை சீருடைகள் வழங்கப்படவுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 4,640,086 ஆகும். அதன்படி, 2025ஆம் ஆண்டிற்கான பாடசாலை சீருடைகளின் முழுத் தேவையும் (100%) சீன மக்கள் குடியரசால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
குறித்த சீருடை துணிகள் மூன்று தொகுதிகளாக இலங்கையை வந்தடையவுள்ளதுடன், முதலாவது மற்றும் இரண்டாவது தொகுதிகள் ஏற்கனவே இலங்கையை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். மூன்றாவது தொகுதி டிசம்பர் 25ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளது.
மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,
கல்வி எமது நாட்டிற்கு மிகவும் முக்கியமானது, எமது அரசாங்கம் கல்விக்கு அதிக முன்னுரிமை அளித்து வருகிறது. நாம் அபிவிருத்தி அடைய கல்வி ஒரு அடிப்படை வழிமுறையாகும்.
எந்தவொரு சமூக-பொருளாதார வேறுபாடு அல்லது அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து பிள்ளைகளும் கண்ணியத்துடன் கல்வியை அணுக கல்வியில் முதலீடுகள் செய்யப்பட வேண்டும். அதற்கான பல முன்மொழிவுகளை நாங்கள் ஏற்கனவே முன்வைத்துள்ளோம்.