அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தமது மகனான ஹன்டர் பைடனுக்குப் பொது மன்னிப்பு வழங்கியிருப்பதாக நேற்று (1) அறிவித்தார்.
போலி தகவல் வழங்கியது, சட்டவிரோதமாகத் துப்பாக்கி வைத்திருந்தது, கூட்டரசு வரி தொடர்பான குற்றச்சாட்டுகள் ஆகியவை சார்ந்த வழக்கில் ஹன்டர் பைடன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
எனினும் தமது மகனுக்குப் பொது மன்னிப்பு வழங்கும் ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளதாக ஜனாதிபதி பைடன் கூறினார்.
“அமெரிக்காவின் ஜனாதிபதியாக பொறுப்பேற்றதிலிருந்து நீதித்துறையின் முடிவில் தலையிடமாட்டேன் என்று தெரிவித்திருந்தேன். சொன்னபடி செய்துள்ளேன். என் மகன் மீது வீண் பழி சுமத்தப்பட்டு அவர் நியாயமற்ற வகையில் நடத்தப்பட்டபோதும் நான் தலையிடவில்லை,” என்று ஜனாதிபதி பைடன் அறிக்கை வெளியிட்டார்.
“எனக்கு அமெரிக்க நீதித்துறையில் நம்பிக்கை உள்ளது. ஆனால் இந்த விவகாரம் குறித்து மிகக் கடுமையான மனப்போராட்டத்தால் அவதியுற்றேன். அரசியல் காரணமாக எனது மகனுக்கு அநீதி இழைக்கப்பட்டது. எனவே, என் மகனுக்குப் பொது மன்னிப்பு வழங்க முடிவெடுத்தேன்,” என்றார் ஜோ பைடன்.
ஹன்டர் பைடனின் சிறைத் தண்டனையை ஜனாதிபதி பைடன் குறைக்கமாட்டார் என்றும் அவருக்குப் பொது மன்னிப்பு வழங்க மாட்டார் என்றும் வெள்ளை மாளிகை இதற்கு முன்பு தெரிவித்திருந்தது.
இதேவேளை டொனால்ட் ட்ரம்ப் இதனை கடுமையாக விமர்சித்து கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் “நீதித்துறையே கருச்சிதைவு செய்யப்பட்டுள்ளது” என ஜோ பைடனின் முடிவை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் 2021யில் ஆட்சியை இழந்தபோது, வெள்ளை மாளிகை பகுதியில் போராட்டம் நடத்தி தற்போது சிறையில் இருக்கும் தனது ஆதரவாளர்களுக்கும் இதேபோல் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.