பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரியும் மக்களின் வரிச் சுமையை குறைக்கக் கோரியும் மக்கள் பேரவைக்கான இயக்கம் ஆரம்பித்துள்ள பொதுமனுவில் கையெழுத்திடும் நிகழ்வு நேற்றுமுன்தினம் (15) கொழும்பு தேசிய நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மக்கள் பேரவைக்கான இயக்கத்தின் தோழமை அமைப்பான செம்புலம் மக்கள் கூடம் இம்மனுவில் கையெழுத்திட்டு இக் கோரிக்கைகளுக்கு தமது ஒத்துழைப்பை வெளிப்படுத்தியது.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனவின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இந்த மக்கள் விரோத சட்டம் உடனடியாக திரும்பப் பெறப்படுவதுடன், நாட்டில் இதுபோன்றதொரு சட்டத்தை அமுலில் வைத்திருக்க எந்தவொரு தர்க்க நியாயமும் இல்லை என்பதுடன் அது உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும் எனவும் குறித்த பொதுமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், தற்போதுள்ள சட்டத்திற்கு மாற்றீடாக இருக்கும் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு காற்புள்ளி, அரைப்புள்ளி, முற்றுப்புள்ளிகளை சேர்த்தோ அல்லது வேறு ஏதேனும் திருத்தங்களைச் சேர்த்தோ புதிய பெயரில் எந்த ஒரு மக்கள் விரோத சட்டமும் கொண்டு வரப்படக்கூடாது என்றும் செம்புலம் மக்கள் கூடம் கேட்டுக்கொண்டுள்ளது.