அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் அமோக வெற்றிப் பெற்றார். அவர் நாளை (திங்கட்கிழமை) அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார்.
ட்ரம்ப் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.இந்த விழாவில் கலந்துகொள்ள உலக தலைவர்கள் பலருக்கும், பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பதவியேற்பு விழா வழக்கமாக அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு அருகே பொதுவெளியில் நடத்தப்படும் நிலையில், இந்த முறை கடும் குளிர் காரணமாக நாடாளுமன்றத்துக்குள் நடத்தப்படவுள்ளது. இதற்கிடையே ட்ரம்ப், புளோரிடாவின் பாம் பீச்சிலிருந்து வாஷிங்டனுக்கு தனி விமானத்தில் தனது மனைவி, மகனுடன் புறப்பட்டு நேற்று நள்ளிரவு சென்றடைந்தார்.
பதவியேற்பு விழாவிற்கு முன்னதாக பதவியில் இருந்து வெளியேறும் ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆகியோர் வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் மற்றும் மெலனியா டிரம்ப் ஆகியோருடன் தேநீர் அருந்துவார்கள்.
அதைத் தொடர்ந்து, பதவியேற்பு விழாவிற்காக ட்ரம்ப் பாராளுமன்ற கட்டிடத்திற்குச் செல்வார். ட்ரம்ப் பதவியேற்பு விழாவையொட்டி அமெரிக்கா முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
குறிப்பாக வாஷிங்டனில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசார் மற்றும் சிறப்பு பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். வாஷிங்டனில் ட்ரம்பின் ஆதரவாளர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் குவிந்து வருகிறார்கள்.
ட்ரம்ப் பதவியேற்றதும் தனது முதல் நாளில் எந்த உத்தரவுகளில் கையெழுத்திடுவார் என்ற அமெரிக்கா முழுவதும் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. குறிப்பாக குடியேற்றம் தொடர்பாக புதிய உத்தரவு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.