சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பங்கேற்கும் போட்டிகளைத் தவிர்த்து மற்ற போட்டிகள் இப்போது பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதற்கிடையே சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்றுள்ள வெளிநாட்டு வீரர் ஒருவரைப் கடத்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் இப்போது சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடந்து வருகிறது. இருப்பினும், பாதுகாப்பு காரணங்களால் இந்திய அணி மட்டும் பாகிஸ்தான் சென்று விளையாடச் சம்மதிக்கவில்லை. இதனால் இந்திய அணி போட்டிகள் மட்டுமே துபாயில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்றுள்ள வெளிநாட்டு வீரர் ஒருவரைப் கடத்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.எஸ் அமைப்பின் பாகிஸ்தான் பிரிவான ஐ.எஸ்.கே.பி அமைப்பினர் வெளிநாட்டு வீரரைக் கடத்தி பணம் பறிக்கத் திட்டமிட்டுள்ளதாகப் பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த ஐ.எஸ்.கே.பி அமைப்பினர் ஏற்கனவே பாகிஸ்தானில் இருக்கும் வெளிநாட்டினர், குறிப்பாகச் சீன மற்றும் அரபு நாட்டினரைக் குறிவைத்து கடந்த காலங்களில் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
துறைமுகங்கள், விமான நிலையங்கள், வெளிநாட்டினர் இருக்கும் குடியிருப்பு பகுதிகளைக் குறிவைத்து இந்த ஐ.எஸ்.கே.பி தாக்குதல் நடத்தியுள்ளனர். இவர்கள் இப்போது வெளிநாட்டு வீரரை கடத்தலாம் என்ற செய்தி வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இது தொடர்பான எச்சரிக்கை ரிப்போர்ட்டில், “ஐ.எஸ்.கே.பி நகரின் புறநகரில் உள்ள சில இடங்களை வாடகைக்கு எடுக்கத் திட்டமிட்டுள்ளனர். கேமரா இல்லாத ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள இடங்களை அவர்கள் வாடகைக்கு எடுக்கிறார்கள்.
மோட்டார் சைக்கிள் மூலம் மட்டுமே செல்லும் அளவுக்குத் தொலைதூரத்தில் உள்ள பகுதிகளாக இருக்கும். இரவு நேரத்தில் வெளிநாட்டு வீரரைக் கடத்தி இங்கு அழைத்து வர அவர்கள் திட்டமிட்டுள்ளனர்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் சர்வதேச வீரர்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பது சிரமம் என்று பலரும் எச்சரித்த நிலையில், இப்போது பாகிஸ்தான் உளவு அமைப்பே இந்த எச்சரிக்கையைக் கொடுத்துள்ளது. முன்னதாக கடந்த 2009ஆம் ஆண்டு லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதல் நடத்தினர். இதனால் அடுத்த சில ஆண்டுகள் எந்தவொரு அணியும் பாகிஸ்தான் சென்று விளையாடவில்லை.
அதன் பிறகும் கூட ஐசிசி தொடர் எதுவும் பாகிஸ்தானில் நடைபெறாமலேயே இருந்தது. இப்போது நீண்ட போராட்டத்திற்குப் பிறகு 13 ஆண்டுகளுக்குப் பின் அங்கு ஐசிசி தொடர் நடைபெறுகிறது. இந்தச் சூழலில் வெளிநாட்டு வீரரை ஐ.எஸ்.கேபி அமைப்பினர் கடத்த திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
பாகிஸ்தான் மட்டுமின்றி ஆப்கானிஸ்தானின் புலனாய்வு அமைப்பும் கூட கிட்டதட்ட இதே எச்சரிக்கையைக் கொடுத்துள்ளது. ஐ.எஸ்.கே.பி முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தலாம் என்றும் இதனால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.