சவூதி அரேபியா மக்காவை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகின்ற உலக முஸ்லிம் லீக் ஏற்பாடு செய்துள்ள இஸ்லாம்-பௌத்த உச்சி மாநாடு நாளை 27 ஆம் திகதி கம்போடியாவில் உள்ள சோகா புனோம் பென் ஹோட்டலில் ஆரம்பமாகவுள்ளது.
மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு கம்போடியா பிரதமர் ஹுன் சென் தலைமையில் நடைபெறும் என்று கம்போடியாவின் இஸ்லாமிய விவகாரங்களுக்கான சிறப்புப் பணிக்கான மூத்த அமைச்சரும் முஸ்லிம் உலக லீக்கின் உயர் கவுன்சிலின் உறுப்பினருமான டாக்டர் உஸ்மான் ஹசன் தெரிவித்தார்.
அமைதி மற்றும் மத நல்லிணக்கமான சமுதாயத்தை உருவாக்கும் நோக்கிலான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள இம்மாநாடு எதிர்பார்க்கிறது.
இஸ்லாம்-பௌத்த மாநாட்டை ஏற்பாடு செய்வது பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த மக்களிடையே அமைதி சகிப்புத்தன்மை மற்றும் அமைதியான சகவாழ்வை வளர்ப்பதில் கம்போடியாவின் அனுபவத்திலிருந்து மற்ற நாடுகள் கற்றுக்கொள்ள அனுமதிக்கும் என்று கலாநிதி உஸ்மான் ஹசன் மேலும் கூறினார்.
இம்மாநாட்டில் 35 நாடுகளைச் சேர்ந்த சுமார் 200 வெளிநாட்டு பிரதிநிதிகளும் உட்பட மொத்தம் 1,000 பேர் வரை கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாநாட்டில் பங்கேற்க அமரபுர நிக்காயவின் மகாநாயக்கர் வணக்கத்திற்குரிய மாதம்பகம அஸ்ஸஜி திஸ்ஸ மகாநாயக்க தேரர் உள்ளிட்ட ஒரு குழுவும் இலங்கையிலிருந்து பயணமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.